தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக் கூடாது – கோர்ட் அதிரடி உத்தரவு !

தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக் கூடாது – கோர்ட் அதிரடி உத்தரவு !

Share it if you like it

தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என்ற பெருமையை கொண்ட தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாபநாசத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தாமிரபரணி நதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாகத் தாமிரபரணி நதியை நம்பி சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது

இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீர் மற்றும் மாசினால் சமீபகாலமாகத் தனது பொலிவையும் பாரம்பரியத்தையும் இழந்து வருகிறது. பாபநாசத்தில் தொடங்கி புன்னகாயல் வரை வீட்டு கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், கால்நடை கழிவுகள் என பல வகைகளில் கழிவுநீர் தாமிரபரணி நதியில் கலப்பதால் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறி வருகிறது.

குறிப்பாக மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தாமிரபரணி நதி குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரியவந்துள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாநகர பகுதியில் மேல கருங்குளத்தில் தொடங்கி அருகன்குளம் வரை மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்து பூந்துறை, கொக்கரகுளம் கருப்பந்துறை மேலநத்தம் உடையார்பட்டி உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் மூலம் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலப்பதாகக் பொதுமக்களால் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையே பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மாநகராட்சி சார்பில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றின் கரையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அவைகள் பராமரிப்பில்லாமல் தற்போது வரை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது என்பது தொடர்கதையாகவே உள்ளது.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் ‘தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் புகழேந்தி சுவாமிநாதன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் நாளை நேரில் ஆஜராகும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிபதிகளின் இந்த உத்தரவு தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

இது குறித்து தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த கோபால்சாமி கூறும்போது, “2016 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் லிட்டர் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பதாக மாநகராட்சி கூறியது. தற்போது பல லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. இதை தடுக்க அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நீதிபதிகள் ஒரு சொட்டு கழிவுநீர் கூட கலக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் தாமிரபரணி மறுசீரமைப்பு ஆணையத்தை உருவாக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *