உடம்பிற்கு கரிசனம் காட்டும் கரிசலாங்கண்ணி!

உடம்பிற்கு கரிசனம் காட்டும் கரிசலாங்கண்ணி!

Share it if you like it

சித்தர்களில் ஒருவரான இராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் திருஅருட்பிரகாச வள்ளலார், மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

கரிசாலை மஞ்சள் காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் இரத்த புற்றுநோய்போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.

இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை,  கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.  பல சித்தர்கள் கரிசாலையான அபூர்வ மருந்தை கற்ப மருந்தாக உண்டு பல யுகங்கள் தனது உடம்பினை கற்பமாக மாற்றி வாழ்ந்தார்கள்.கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம் என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

திருவுண்டாம் ஞானத்தெளிவுண்டாம் மேலை யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் குருவுண்டாம் பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக் கையாந்தகரைத் தன்னாகத் தின்றாகத் தான்.

விளக்கம் :
இம்மஞ்சள் கரிசாலையை உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசாலையை பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்தது காணப்படும்.

வெள்ளை கரிசலாங்கண்ணி பற்றிய பாடல்:

குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுறர் பாண்டு பன்னோ யொழிய நிரர் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக் கையாந்தகரை யொத்தக்கால்   ( தேரன் வெண்பா)

விளக்கம் :
இவ் வெள்ளை கரிசாலையை எடுப்பதால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் இரத்த சோகை அல்லது உடலின் உறுப்புகளின் வீக்கம் இருக்காது. முக்கியமாக 18 வகையான காமாலை நோய் தீரும். மேலும் குரலுறுப்பு நோய் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். இவ் வெள்ளை கரிசாலை  சிறிது கார சுவை உடையது. பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.

வள்ளலார் சொன்ன ஞான மூலிகையான கரிசாலை என்ற கரிசலாங்கண்ணி தான் சிறந்ததாக இடம் பெற்றுள்ளது. பொதுவாக கல்லீரல் 300க்கும் மேற்பட்ட வேலையை செய்கின்றது. இரத்தத்தை சுத்தம் செய்வதில் இருந்து பித்தநீரை வெளியேறும் வரை பல வேலைகளை செய்கிறது.

இரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் தேவையைவிட குறைந்தால் உயிர் பிரிய நேரும். ஆனால் கரிசாலைக்கொண்டு இப்பிரச்சனையை தீர்க்க முடியும்.உடலின் சக்தி சேமித்து வைக்கும் ஓர் உறுப்பு கல்லீரலே. அப்பேற்ப்பட்ட கல்லீரல் பாதிப்படைந்தால் ராஜ உறுப்புகளான சிறுநீரகம், இதயம், மண்ணீரல், கணையம் இன்னும் பல உறுப்புகள் பலவீனமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

கரிசாலை கல்லீரல் சம்மந்தப்பட்ட அனைத்து நோயையும் குணமாக்கும். முக்கியமாக மஞ்சள் கரிசாலையை ஆட்டுப்பாலில் கலந்து காலை மாலை கொடுக்கையில் மகோதரம் என்று சொல்லக்கூடிய கல்லீரல் பாதிப்படைந்து வயிறு வீக்கம், கல்லீரல் வீக்கம் மற்றும் சித்தர்கள் சொன்ன 18 வகையான காமாலைகளுக்கும் இக்கரிசாலை சிறந்த மருந்து.

இதேபோன்று கரிசாலையில் புடம் போடப்பட்ட அன்னபேதி செந்தூரமும் கூட தீராத மஞ்சள் காமாலை நோய்களுக்கும் கொடுத்து குணமாக்க முடியும். இன்னமும் சில சித்த வைத்தியர்கள் இம்முறையை பின்பற்றி மிக சிறந்த முறையில் மக்களை பிணியில் இருந்து காத்துவருக்கின்றனர்.

வெள்ளை கரிசலாங்கண்ணியில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை கரிசாலையை உணவாகவும் எடுத்துக்கொண்டால் நல்லது. தலை முடி நன்கு வளர கருமையாக இருக்க இவ்வெள்ளை கரிசாலை உதவுகின்றன. இவை ஓர்  இயற்கை கூந்தல் தைலமாக இருக்கிறது.

கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் தைலம் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தத்தை சரி செய்து தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் மற்றும் இளநரையையும்  சரி செய்யலாம். இக்கரிசாலையை பொற்றகாக கொடுப்பதால் சித்தர்கள் இதனை பொற்றலை என்று அழைக்கின்றனர்.


Share it if you like it