கர்வம் இல்லா பக்தியே உயர்ந்தது!

கர்வம் இல்லா பக்தியே உயர்ந்தது!

Share it if you like it

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது. இதனை உணர்ந்த கண்ணன் பாஞ்சலியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டான்.

ஒருநாள் காட்டில் இருந்த திரௌபதியை காண அந்த  மாயவன் வருகை புரிந்தான்….,

கண்ணனை கண்ட திரௌபதைக்கு மிக்க மகிழ்ச்சி. அவள் கண்ணனிடம் “அண்ணா, நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே?” என்றாள். “தங்கையே ஏனோ மனம் உன்னைப் பார்க்கும் ஆவலால் உந்தித் தள்ளியது. அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன்” என்றார்.

அதைக்கேட்டு திரௌபதையின் கண்களில் கண்ணீர் அரும்பியது.

“அண்ணா, என்னை காண உங்கள் பொற்பாதம் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும்.. சரி சரி, நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும்” என்றாள்.

”கண்ணனும் சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.

திரௌபதையின் வேண்டுதலை ஏற்று பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். வந்தவன் அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையை ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான்.மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்து  அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். தீ ஜூவாலை விட்டு எரிந்தது, ஆனாலும் மதியமாகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை.

கண்ணன் தங்கையிடம்

“தங்கையே மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது. அடியேன் தீர்த்தமாட வெந்நீர் என்னாச்சு?” என கேட்க திரௌபதி கண்கலங்கியவாறே “அண்ணா, என்ன சோதனையோ தெரியவில்லை. ஏனோ கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை.. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது” என்றாள்.கண்ணன் பாஞ்சாலியின் பக்கத்தில் இருந்த பீமனிடம் “பீமா, அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு” என்றார். பீமனும் கண்ணன் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்க்க, கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது.

கண்ணன் பாஞ்சாலியிடம் “தாயே தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான். அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்துகொண்டே இருந்தது. பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். இப்போது புரிகிறதா ஏன் கொப்பறை நீர் கொதிக்கவில்லை என”.

ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.  திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. ஆஹா, பகவான் கண்ணனிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே, இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான். ஒரு தவளை கண்ணன் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது, அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.

பகவான் ஒருவரின் உள்ளத்தின் பக்தியை தான் பார்க்கிறானே தவிர  அதை  நான் செய்தேன் இதை நான் செய்தேன்  என்ற கர்வமும் கூடாது. பக்திக்கு துளி கூட கர்வமும் கூடாது என்பது புரிகிறதல்லவா.

 


Share it if you like it