தமிழகத்தை நடுங்க வைக்கும் தொடர் கொலைகள் : தமிழகம் கொலைகார மாநிலமாக மாறுகிறதா ?

தமிழகத்தை நடுங்க வைக்கும் தொடர் கொலைகள் : தமிழகம் கொலைகார மாநிலமாக மாறுகிறதா ?

Share it if you like it

தென் தமிழகத்தின் மிக பிரபலமான மருத்துவமனையான மதுரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் ஊழியர் ஒருவர் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்த நபர் அவரது நகையையும் பறித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த தினங்களில் நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த படுகொலை சம்பவங்கள் தமிழக காவல்துறையை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில் தென் மாவட்டத்தின் பிரதான மாவட்டமான மதுரையில் கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து மூன்று மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டனர். நகைகளுக்காக வயதான மூதாட்டிகளை குறி வைத்து கொலை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 8ஆம் தேதி வாகைகுளத்தைச் சேர்ந்த காசம்மாள் என்ற எழுபது வயது மூதாட்டியும், ஜூலை 11ஆம் தேதி மதுரை மேலூர் அருகே பாப்பு என்ற மூதாட்டியும், விருகனூர் பகுதியில் 56 வயதுடைய ஒரு பெண்ணும் கொலை செய்யப்பட்டனர். இதன் காரணமாக மதுரையில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தற்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் பணியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மருத்துவமனையில் முத்துலட்சுமி என்ற 70 வயது மூதாட்டி பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று இரவு பணியில் இருந்த அவர் இன்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் இரவு நேரத்தில் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர் அணிந்திருந்த தோடு உள்ளிட்ட நகைகள் மாயமாகி இருக்கும் நிலையில் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையை மறைக்க நகை திருடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே மதுரையில் மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்ந்து கத்தி முனையில் ஒரு கும்பல் திடீரென கடத்திச் சென்றது.

கடத்தி சென்ற மர்ம கும்பல் மாணவனின் தாய் மைதிலிக்கு போன் செய்து 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மைதிலி மதுரை எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடத்தல் கும்பல்காரன் பணம் கேட்டு மிரட்டும் ஆடியோவையும் காவல் நிலையத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த ஆடியோவில் “ஒரு மணி நேரத்தில 2 கோடி பணத்தை எடுத்துட்டு ரவுண்டனாவுக்கு வரணும், இல்லனா உன் பையன நீ பாக்கமுடியாது. கண்ட துண்டமா வெட்டி போட்டுட்டு போயிட்டே இருப்பபேன்” இவ்வாறு அந்த ஆடியோவில் கடத்தல் கும்பல்காரன் பேசியுள்ளான்.

இதனை தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி கடத்தல் கும்பல்காரர்களை கண்டுபிடித்து சிறுவனை மீட்டனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *