மாற்று திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2023 அக்டோபர் 22 முதல் 28 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு இந்தியா 303 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ளது. அதில் 191 ஆண்கள் மற்றும் 112 பெண்கள் என கூறப்படுகிறது. தற்போது வரை 100 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இதனை பாராட்டி பிரதமரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் திரு. தர்மராஜ் சோலைராஜ் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு. தர்மராஜ் சோலைராஜ் அவர்கள், உலக அரங்கில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம் அனைவரையும் தொடர்ந்து பெருமைப்படுத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.