கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயின் கோட் திரைப்படம் வெளியானது. இதனால் பல திரையரங்குகள் ஹௌஸ் புல்லில் ஓடிக்கொண்டிருக்கிறது. கோட் திரைப்படமும் கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் தியேட்டரில் படம் பார்த்தவர்கள் தியேட்டர் தொடர்பான தனது கசப்பான அனுபவங்களை கூறியுள்ளனர். அதாவது மிகவும் பிரபலமான சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பதற்காக வைக்கப்பட்ட இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கழிவறை வசதி தூய்மையாக இல்லை. இருக்கையிலே பான்பிராக் போட்டு துப்பி வைத்துள்ளனர். தியேட்டர் முழுவதும் சிறுநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் குழந்தைகள் வாந்தி எடுத்ததாகவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டை வைத்தனர். தியேட்டரில் உள்ள ஏசி வேலையே செய்யவில்லை. இருக்கைகள் உடைந்து இருக்கிறது. இவ்வாறு செய்தியாளர்களிடம் தியேட்டரில் படம் பார்த்த பெண்கள் முறையிட்டனர். தியேட்டரில் எதுவுமே தூய்மையாக இல்லை, சரியாக நிர்வாகம் செய்யமாட்டீர்களா என்று கேட்டதற்கு டிக்கெட் பணத்தை கொடுத்து அனுப்பி விடுகின்றனர் என்று பெண்கள் தெரிவித்தனர். மேலும் தியேட்டரே இந்த லட்சணத்தில் இருந்தால் அங்கு விற்கப்படும் உணவு பொருட்கள் மட்டும் தூய்மையாக இருக்குமா என்று கூறி தின்பண்டங்களை வாங்கவில்லை என்று தியேட்டரில் படம் பார்க்க வந்த மக்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே சென்றனர்.
