முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை !

முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை !

Share it if you like it

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தை ஒழிக்க முயன்ற முன்னாள் எஸ்.பி., மோகன்ராஜை மிரட்டிய தி.மு.க., முக்கிய புள்ளிகள் மற்றும் அதனை கண்டு கொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
‘கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. இங்கு எப்போது வேண்டுமானாலும் சாராயச் சாவுகள் நடக்கலாம். அதற்கு தன்னால் பொறுப்பேற்க முடியாது’ என்று புலம்பியபடியே, விருப்ப ஓய்வில் சென்ற, எஸ்.பி., மோகன்ராஜ், தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார். அவர் பயந்தபடியே, கள்ளச்சாராய மரணம் என்ற கொடூரம் நடந்துள்ளது. இது தொடர்பான செய்தியை தினமலர் நாளிதழ் வெளியிட்டது.

இதனை வைத்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஆக இருந்த மோகன்ராஜ், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே, கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த 25 காவலர்களை இடமாற்றம் செய்தார்.

கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த மோகன்ராஜ் பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. ஆனால், அதற்கு போலீஸ்துறை சார்பில் மழுப்பலான ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்றைய தினமலர் நாளிதழில், மோகன்ராஜ் அவர்கள், ஓய்வு பெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே விருப்ப ஓய்வில் சென்றதற்குக் காரணம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், அவரை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்தப் பகுதி திமுக முக்கியப் புள்ளிகள் மிரட்டியுள்ளதாகவும், காவல்துறை தலைமையும் இதனைக் கண்டுகொள்ளவில்லை என்பதால், வேறு வழியின்றி விருப்ப ஓய்வில் சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு, பொதுமக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை எண்ணி உண்மையான வருத்தம் இருக்குமேயானால், கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் எஸ்பி மோகன்ராஜை மிரட்டிய திமுக முக்கியப் புள்ளிகள் யார் என்பதையும், இதனை அறிந்தும் நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை அதிகாரிகள் யார் என்பதையும் விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எல்லாம் தெரிந்திருந்தும், தன் கட்சியினரைக் காப்பாற்ற பொதுமக்களைப் பலி கொடுத்த முதல்வர் என்பதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

அதற்கு முதற்படியாக, நாங்கள் ஏற்கனவே கூறியது போல, சுமார் ஐம்பது உயிர்கள் பறிபோனதற்குப் பொறுப்பேற்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா?. இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *