மத்திய அரசின் திட்டத்தை தமிழகத்தில் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் – அண்ணாமலை !

மத்திய அரசின் திட்டத்தை தமிழகத்தில் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் – அண்ணாமலை !

Share it if you like it

மேற்கூரை இடிந்து மாணவர்களின் தலையில் விழுந்தாலும் பரவாயில்லை, மத்திய அரசு திட்டத்திற்கு அனுமதியளிக்கமாட்டோம் என்கிறதா திமுக அரசு? எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த PM Shri திட்டம், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு, இதன் மூலம், 20,000க்கும் அதிகமான பள்ளிகள் இதுவரை பயனடைந்துள்ளன. ஆனால், தங்கள் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, தமிழகத்தில், PM Shri திட்டத்தை இதுவரை செயல்படுத்தாமல் இருக்கிறது திமுக அரசு.

திமுக ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுவதும் சிதிலமைடைந்துள்ள, 10,000 அரசுப் பள்ளிகளுக்கு, புதிய கட்டிடம் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதியளித்தனர்.

மூன்று ஆண்டுகள் கடந்து, நான்காவது ஆண்டு நடக்கிறது. இதுவரை, மொத்தம் எத்தனை பள்ளிகளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக் கட்டிடங்கள், திறக்கப்பட்டு சில மாதங்களிலேயே, மேற்கூரை இடிந்து விழும் அவலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு மாதமும், தமிழகத்தில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த செய்தி வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. பல முறை மேற்கூரை விழுந்து, மாணவ மாணவியர் காயமடைந்துள்ளனர்.

ஆனால், அதன் பின்னரும் திமுக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்தப் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து, அவற்றைப் பராமரிக்கவோ, அல்லது புதிய கட்டிடங்கள் கட்டவோ எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைத்தும், திமுக அரசுக்கு அவர்கள் குரல் எட்டவில்லை. எளிய குடும்பப் பின்னணி கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்தானே என்ற புறக்கணிப்புதான் திமுக அரசிடம் காண முடிகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும், பல பள்ளிகளின் மேற்கூரை விழுந்து, மாணவர்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றார்கள். நேற்றைய தினம், 08/08/2024 அன்று, செங்கல்பட்டு மாவட்டம் சிறுதாவூர் அரசுப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் காயமடைந்துள்ளனர்.

பலமுறை கட்டிடங்கள் குறித்துப் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று மாணவர்கள் தேர்வுகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

கடந்த 05/07/2024 அன்று, காஞ்சிபுரம் மாவட்டம் குருவி மலையில், ரூ.62 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசுப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைப் பூச்சு, மூன்றே மாதங்களில் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 11/07/2024 அன்று, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி நடுநிலைப் பள்ளி, மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. சுமார் 40 ஆண்டுகள் பழமையான இந்தப் பள்ளிக் கட்டிடங்களைச் சரிசெய்ய வேண்டும் என்று, பலமுறை ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தும், திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கடந்த 03/04/2024 அன்று, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதி அத்தி கிராமத்தில், ரூ.17.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை, ஆறே மாதத்தில் இடிந்து விழுந்து, 5 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபோல, தமிழகம் முழுவதுமே அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் பழுதடைந்து, மாணவ, மாணவியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கின்றன. ஆனால், திமுக அரசுக்கு இது குறித்த கவலை இன்றி சிலை வைப்பதிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் நலனுக்காக, இது வரை எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாத திமுக, மத்திய அரசின் திட்டங்களையும் செயல்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், PM Shri திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ஆலோசித்து, இந்தக் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு, ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது? உண்மையில் திமுக அரசின் நோக்கமென்ன? அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வியோ, உயர்தர கட்டமைப்போ கிடைக்கக் கூடாது என்று செயல்படுகிறதா?

திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், பள்ளி மாணவ மாணவியர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசுப் பள்ளிக் கட்டிடங்களை வைத்திருப்பதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து, அவற்றைச் சரிபார்த்துப் பராமரிக்கவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இவை அனைத்தையும் உள்ளடக்கி, கல்வித்தரத்தை உயர்த்தும் PM Shri திட்டத்தை, தமிழகத்தில் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *