குஜராத்தில் காலியாகும் காங். கூடாரம்!

குஜராத்தில் காலியாகும் காங். கூடாரம்!

Share it if you like it

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் கூடாரம் காலியாகத் தொடங்கி இருக்கிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர பாய் படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை, படேல் சமூகத்தினர்தான் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும். அந்த வகையில் இந்த சமூகத்தினரின் ஓட்டுக்களை பெற்று 3 முறை முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. இதன் பிறகு, 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, வெற்றி பெற்று பிரதமராகவும் ஆகிவிட்டார்.

இந்த சூழலில், படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல் என்கிற இளைஞர், 2019-ம் ஆண்டு படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, போராட்டம் நடத்தி அச்சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து, அவரை வளைத்துப் போட்ட காங்கிரஸ் தலைவர்கள், ஹர்திக் படேலை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமித்தார்கள். இதன் பிறகு, பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் கட்சிக்காக வேலை செய்து வந்த ஹர்திக் படேல். இதனிடையே, குஜராத் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்தார் ஹர்திக் படேல். இதன் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இருந்து குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் என்ற தனது சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்கிற தகவல் வெளியாகின. இப்படிப்பட்ட நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, ஹர்திக் படேல் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி விட்டேன். இதனை சக நிர்வாகிகள் மற்றும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் மாநிலத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹர்திக் படேல் விலகி இருப்பது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், ஹர்திக் படேல் விலகியதால், அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து விலகுவார்கள். இதனால், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாவது உறுதியாகி இருக்கிறது.


Share it if you like it