‘இதுதான் புதிய இந்தியா’: பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்!

‘இதுதான் புதிய இந்தியா’: பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்!

Share it if you like it

நடிகர் மாதவன், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பதுதான் தமிழகத்தில் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியபோது, இது மிகப் பெரிய பேரழிவாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னார்கள். ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு கதையே மாறிவிட்டது. தற்போது டிஜிட்டல் பொருளாதார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இதுதான் புதிய இந்தியா’ என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார் நடிகர் மாதவன்.

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. இவ்விழாவில் நிகழாண்டு கவுரவத்திற்குரிய நாடாக இந்தியா பங்கேற்றிருக்கிறது. இதையடுத்து, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரைப்பிரபலங்கள் நடிகர்கள் மாதவன், நவாஸுதீன் சித்திக், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல, தமிழ் திரையுலகிலிருந்து இயக்குநர் பா.ரஞ்சித், நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோரும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த விழாவில், ஆர்.மாதவன் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபக்ட்’ என்கிற திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது. இப்படம் நாடுமுழுவதும் ஜூன் 1-ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார்.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதமர் மோடியை பாராட்டிப் பேசியிருக்கிறார் நடிகர் மாதவன். இந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மாதவன் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் டிஜிட்டல் பொருளாதார நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தினார். அப்போது, பொருளாதார நிபுணர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஒரு விவசாயிக்கும், படிக்காத ஏழை, எளிய மக்களுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றியும், ஆன்லைன் கணக்கு பற்றியும் எப்படி சொல்லித் தரப்போகிறீர்கள் என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த முயற்சி இந்தியாவுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய பேரழிவைத் தரப்போகிறது என்றும் பேசப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த கதையே மாறிவிட்டது. தற்போது, டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. இது ஏன் நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், இந்திய விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு பற்றி கற்றுத்தர வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இதுதான் புதிய இந்தியா” என்று கூறியிருக்கிறார்.

மாதவனின் இந்த பேச்சு நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it