ஹிந்து கடவுள் அவமதிப்பு: ‘செஞ்சட்டை’ மீது வழக்கு!

ஹிந்து கடவுள் அவமதிப்பு: ‘செஞ்சட்டை’ மீது வழக்கு!

Share it if you like it

மதுரையில் நடந்த செஞ்சட்டை பேரணியில் ஹிந்து கடவுள்களை அவமதித்து கோஷம் எழுப்பப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஹிந்து கடவுள்களை அவமதிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, திராவிடர் கழகத்தினர் கருப்பர் கூட்டம் என்றொரு அமைப்பை வைத்துக் கொண்டு, ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தி.மு.க. உள்ளிட்ட கட்சியினரும் ஆதரவாக இருந்து வருகின்றனர். கருப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவன், 2020-ம் ஆண்டு முருகனின் வேலையும், கந்தசஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டான். இவன் மீது ஹிந்து அமைப்புகள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து இவன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.

இதன் பிறகு, திராவிடர் கழகத்தினரும், கருப்பர் கூட்டத்தினரும் அடக்கி வாசித்து வந்தனர். இந்த சூழலில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மீண்டும் ஹிந்துக் கடவுள்களை அவமதிக்கும் செயல் தொடங்கி இருக்கிறது. சமீபத்தில் மைனர் விஜய் என்பவன், தில்லை நடராஜர் நடனமாடுவதை மிகவும் கேவலமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருந்தான். இவன் மீது ஹிந்து அமைப்புகள் புகார் கொடுத்தும், தி.மு.க. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அவன் தொடர்ந்து ஹிந்து அமைப்பினரையும், ஹிந்துக்களையும் அவதூறாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். இதை கண்டித்து சிதம்பரத்தில் சிவனடியார்கள் கண்டனப் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தினர். ஆனாலும், இதுவரை மைனர் விஜய் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில்தான், செஞ்சட்டை பேரணி என்கிற பெயரில் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தி இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரும், திராவிடர் கழகத்தினரும். மதுரை பைபாஸ் ரோட்டில் மே 29-ம் தேதி செஞ்சட்டை பேரணி நடந்தது. இப்பேரணியில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. வெங்கடேசன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்றவர்கள் ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி கோஷமிட்டனர். இதுகுறித்து ஹிந்து முன்னணி பாலரெங்காபுரம் பகுதித் தலைவர் கண்ணன், நிர்வாகி மதன் உள்ளிட்டோர் தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தனர்.

புகாரில், ஹிந்து சமுதாயத்தையும், ஹிந்து கடவுள்களையும் இழிவான வார்த்தைகளால் வசைபாடி பாடல்களை பாடியும், கோஷமிட்டும் பேரணியாகச் சென்றனர். குறிப்பாக, கடவுள் கண்ணனையும், சுவாமி ஐயப்பனையும் இழிவுபடுத்தினர். கடவுள் முருகனுக்கு நேர்ச்சை செய்யும் சடங்குகளையும் கொச்சைப்படுத்தினர். பொதுவழியில் இப்படி பேசி அமைதியான சமுதாயத்தில் கலவரத்தை துாண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் கம்யூனிஸ்ட், வி.சி.க., திராவிடர் கழகம் மீதும், இழிவாக கோஷமிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இப்புகார் தொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் திராவிடர் கழகத்தினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.


Share it if you like it