வேலூர் நாகநதியை மீட்டெடுத்த 20,000 பழங்குடியின பெண்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் புகழாரம்!

வேலூர் நாகநதியை மீட்டெடுத்த 20,000 பழங்குடியின பெண்கள்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் புகழாரம்!

Share it if you like it

100-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வேலூர் நாகநதியை 20,000 பழங்குடியின பெண்கள் சேர்ந்து மீட்டெடுத்த சம்பவத்தை நினைவுகூர்ந்து அனைவரையும் நெகிழ வைத்தார்.

2014-ல் பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு, மன் கி பாத் (மனதின் குரல்) என்கிற பெயரில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 2014 அக்டோபர் 3-ம் தேதி முதல் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இன்று 100-வது நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி, தனது உரையின்போது இம்மாத நிகழ்வுகள், சாதனைகள், தனி நபரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்வார். மேலும், நாட்டு மக்களின் கருத்துக்களையும் கேட்டு, அதற்கேற்ற வகையிலும் உரையாடி வருகிறார். இதனால், பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அந்த வகையில், 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பேசிய பிரதமர் மோடி, “100-வது நிகழ்ச்சிக்கு நாட்டு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் திருவிழாவாக மாறி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை எதிர்நோக்கி நாட்டு மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது மக்களை சந்திக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும். அந்த வேலை அப்படிப்பட்டது. ஆனால், 2014-க்கு பிறகு மக்களுடன் சந்திப்பு என்பது வேறு மாதிரியாக மாறிவிட்டது. என்னுடைய வேலை மற்றும் பொறுப்புகளில் மாற்றங்கள் வந்துவிட்டன. பாதுகாப்பு, நேர கட்டுப்பாடு உள்ளிட்டவை தினசரி வாழ்வை புதிய கோணத்தில் மாற்றி விட்டது.

50 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் இருக்கும்போது இந்நாட்டு மக்களை தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் சாமானியர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களிடம் இருந்து வரும் ஏராளமான மெசேஜ்களை நான் படித்து வருகிறேன். இந்த நாட்டிற்காக ஒவ்வொருவரும் செய்து வரும் தியாகங்கள் ஆச்சரியமளிக்கிறது. இதில் சிறிதளவேனும் நான் செய்திருப்பேனா எனத் தெரியவில்லை. நம் நாட்டில் மலைகளில் செடிகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள், நீர் வளத்தை மேம்படுத்த கிணறுகள், குளங்கள் வெட்டுபவர்கள் உள்ளார்கள். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள முயற்சி எடுப்பவர்கள் உள்ளனர். ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவர்களை பற்றியெல்லாம் பேசும்போது நான் மிகவும் உணர்ச்சி வசப்படுவேன்.

இன்றையதினம் மனதின் குரல் நிகழ்ச்சியின் பழைய நினைவுகள் பலவும் என் கண் முன்னால் வந்து செல்கின்றன. மனதின் குரலில் பேசிய அனைத்து நாயகர்களும்தான் இந்நிகழ்ச்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஹரியானாவைச் சேர்ந்த சகோதரர் சுனில் ஜக்லான் என்னுடன் இன்று இருக்கிறார். அவர், தனது சொந்த மாநிலத்தில் பாலின விகித வேறுபாட்டை குறைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறார். இவரது செல்பி வித் டாட்டர் (Selfie with Daughter) பிரசாரம் பற்றி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்ற முயற்சிகள் ஹரியானாவில் பாலின வேறுபாட்டை முன்னேற்றம் அடையச் செய்துள்ளன. அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் இந்த நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். வேலூர் நாகநதியை சுத்தம் செய்ய 20,000 பெண்கள் ஒன்றாக கைகோர்த்திருக்கிறார்கள். இதுபோன்ற செயல்கள் பெண்களின் ஆளுமை திறனை காட்டுகின்றன” என்று கூறினார்.

வேலூர் நாகநதி பற்றி பிரதமர் பேசிய காணொளி தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை கிளிக் செய்து நாகநதியை பழங்குடியின பெண்கள் சீரமைத்து எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம்…


Share it if you like it