இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மசோதா தாக்கல்!

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவில் மசோதா தாக்கல்!

Share it if you like it

ரஷ்ய நாட்டின் ஏவுகணையை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பான பொருளாதாரத் தடையில் இருந்து இந்தியாவுக்கு விலக்களிக்கும் சட்டத் திருத்த மசோதா அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

2014-ம் ஆண்டு கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதை கண்டித்து ரஷியாவின் அதிநவீன ‘எஸ் 400’ ரக ஏவுகணைகளை இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்தது. ஆனால், இதையும் மீறி துருக்கி நாடு ரஷிய ஏவுகணையை வாங்கியது. எனவே, அந்நாட்டின் மீது அமெரிக்கா ‘காட்சா’ சட்டத்தின் கீழ் பொருளாதாரத் தடை விதித்தது. இதேபோல, இந்தியாவும் 36,000 கோடி ரூபாய் மதிப்பில் 5 ‘எஸ் 400’ ரக ஏவுகணைகளை வாங்க 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. இதற்கு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். இதையும் மீறி இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதனால், இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். எனினும், இதன் பிறகு அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி வருகிறார்.

இந்த சூழலில்தான், காட்சா சட்டப்படி பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்களிக்கும் சட்டத் திருத்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை தாக்கல் செய்த ஆளும் ஜனநாயகக் கட்சியின் எம்.பி.யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரோ கன்னா கூறுகையில், “எல்லையில் சீன ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கவும், சொந்த ராணுவ பலத்தை பெருக்கவும், இந்தியாவுக்கு ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணைகள் தேவைப்படுகின்றன. ஆகவே, காட்சா சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்களிக்க வேண்டும். இது,இந்தியா – அமெரிக்கா ராணுவ ஒப்பந்தத்திற்கு மேலும் வலுசேர்க்கும். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்து எம்.பி.க்களும் ஒருமித்த ஆதரவு தர வேண்டும்” என்றார். இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால், அது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக கருதப்படும்.


Share it if you like it