சமூக நீதி, சமூக நீதி என பேசிக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு – வானதி சீனிவாசன் !

சமூக நீதி, சமூக நீதி என பேசிக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு – வானதி சீனிவாசன் !

Share it if you like it

திமுக அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் நேரடி நியமனங்களை செய்கிறது என்று தலைமை செயலக சங்கம் குற்றம்சாட்டியுள்ளதை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

அரசு பணிகளுக்கு நேரடி நியமன விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம். சமூக நீதி, சமூக நீதி என பேசிக் கொண்ட சமூக நீதியை காலில் போட்டு மிதிக்கும் திமுக அரசு.

மத்திய அரசு நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்களை, மத்திய அரசு துறைகளில் குறிப்பிட்ட காலத்திற்கு நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு காலங்காலமாக இருக்கும் நடைமுறைதான்.

ஆனால், இந்த முறையை பாஜக அரசு செயல்படுத்த முயற்சித்த போது, ஏதோ புதிய திட்டம் போல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு நாடகம் நடத்தின. மத்திய அரசில் நேரடி நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நேரடி நியமனம் என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். தகுதிமிக்க பட்டியலின பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிக்கும் செயல்” என கூறியிருந்தார்.
ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடத்தை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் அம்பலப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், இணைச் செயலாளர் அ.ஜீவன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில், “திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதலே, அரசுத் துறைகளில் ஆலோசகர்கள் நியமனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்பத்தில் சில துறைகளில் மட்டுமே இருந்த ஆலோசகர்கள் நியமனம்.

தற்போது அனைத்துத் துறைகளிலும் புற்றீசல் போல் பெருகிவிட்டது. எந்த வரைமுறையும் இன்றி நியமனங்கள் செய்யப்படுவதுடன், ஊதிய நிர்ணயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப்பணிக்கு தேர்வாகி, பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் முக்கியத்துவத்தையும் திறமையையும பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆலோசகர்கள் மூலம் அரசு நிர்வாகத்தை நடத்துவது ஏற்புடையதல்ல” என கூறியுள்ளனர்.

அதாவது திமுக அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக, சமூக நீதிக்கு எதிராக நேரடி நியமனங்களை செய்கிறது என்று தலைமை செயலக சங்கம் குற்றம்சாட்டியிருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். சமுக நீதி, சமூக நீதி என முழக்கமிட்டுக் கொண்டே சமூக நீதியை காலில் போட்டு மிதிப்பது திமுகவுக்கு வழக்கமானது. இதை இப்போது தலைமைச் செயலக சங்கமே அம்பலப்படுத்தியுள்ளது. இனியும் இரட்டை வேடம் போடாமல், தமிழ்நாடு அரசு பணிகளுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே தேர்வு செய்ய வேண்டும்.


Share it if you like it