போதைப்பொருளால் சீரழியும் தமிழகம் : திராவிட ஆட்சியா ? போதை ஆட்சியா ?

போதைப்பொருளால் சீரழியும் தமிழகம் : திராவிட ஆட்சியா ? போதை ஆட்சியா ?

Share it if you like it

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்ட நிலையில் கொலை,கொள்ளை சம்பவங்களும் அதிகரித்து விட்டது. நாள்தோறும் போதைப்பொருள் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போதைப்பொருளால் நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் முத்துவேளாளர் தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை. புத்தர் நகரை சேர்ந்தவர் ஜில்லா என்கிற தமிழரசன். இவர்கள் இருவரும் பெருங்களத்தூர், குண்டு மேடு உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல, பெருங்களத்தூர் பீர்க்கன்காரனை பகுதியில் சோனு என்கிற கோபாலகிருஷ்ணன் என்பவரும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த இரு கும்பலுக்கும் போதை பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அண்ணாமலை கோபாலகிருஷ்ணனின் மனைவியிடம் ”உன் கணவனை கொன்று விடுவேன்” என மிரட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு 7 மணி அளவில் அண்ணாமலை மற்றும் ஜில்லா தமிழரசனிடம் பேச வேண்டும் என கூறி விவேக் நகர் பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி, அங்கு வந்த அண்ணாமலை, ஜில்லா தமிழரசனிடம் கோபாலகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து இருவரையும் தாக்கியுள்ளார். பின்னர் அரிகிருஷ்ணன் என்பவரின் ஆட்டோவில் இருவரையும் ஏற்றி, அதில் வைத்து அடித்து கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதையடுத்து கோபாலகிருஷ்ணன் ஆட்டோவை செய்யாறுக்கு செல்லும்படி ஓட்டுனர் அரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அரிகிருஷ்ணன் ஆட்டோவில் கேஸ் நிரப்ப வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து பீர்க்கன்காரனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுடுகாட்டில் கொலை செய்து வீசப்பட்டிருந்த அண்ணாமலை மற்றும் தமிழரசனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அண்ணாமலை மற்றும் தமிழரசன் ஆகியோருக்கும் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே பெருங்களத்தூர் மற்றும் குண்டு மேடு உள்ளிட்ட பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய புது பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த சோனு என்கிற கோபாலகிருஷ்ணன் மற்றும் குண்டுமேடு பகுதியைச் சேர்ந்த ஆரிப் என்கிற இருவரை பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தப்பிச் சென்ற ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் காஞ்சிபுரத்தில் இளைஞர் ஒருவர் மது போதையில் பட்டாகத்தியை வைத்து ரகளை செய்த காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேட்டில் இருந்து வெங்கடாபுரம் செல்லும் சாலையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மது போதையில் பட்டாகத்தியை கையில் வைத்துக் கொண்டு வாகனத்தில் செல்லும் பொதுமக்களிடம் பட்டாகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார், இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்றனர்.

பின்னர் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை பட்டாகத்தியால் சேதம்படுத்தியதோடு அதனை தட்டிக் கேட்க முற்பட்ட வாகன உரிமையாளரையும் தாக்க முற்பட்டுள்ளார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரை மடக்கிப் பிடித்து அழைத்து சென்றனர்.

அப்போது, திரைப்படத்தில் வரும் டயலாக் போல வண்டியின் உரிமையாளரை “சிங்கிள்ஸ்-வா; சண்ட செய்வோம்” எனக் கூறி காவல்துறையினர் முன்பாகவே அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது போன்ற குற்றச் சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணியை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *