கோயில் அறங்காவலர்கள் நியமனம்: ஐகோர்ட் அதிரடி!

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: ஐகோர்ட் அதிரடி!

Share it if you like it

கடவுள் பக்தி இல்லாதவர்களை கோயில்களின் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கீழுள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கும் பணி 34 மாவட்டங்களில் நடந்து வருவதாக தெரிவித்த அறநிலையத்துறை, அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்கும் நடைமுறையை முடிக்க ஓராண்டு அவகாசம் தேவை என்றும், ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் 560 கோயில்களுக்கு தமிழக அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

அப்போது, அரசியல் சார்பற்றவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு, விண்ணப்பிப்பவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவரா, இல்லையா என்ற கேள்வி விண்ணப்பத்தில் இடம்பெறும் என்று அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அறங்காவலர் நியமனத்துக்கான விண்ணப்பங்களில், விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியையும் சேர்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில், மேற்படி வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம் பெறாதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, கடந்த விசாரணையின்போது தெய்வ பக்தி கொண்டவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால், அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என இந்த நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்ததால், அந்த கேள்வி இடம்பெறவில்லை என்று அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “இறை பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில், விண்ணப்பதாரர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். மேலும், அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட அளவிலான குழுக்களின் நியமனம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Share it if you like it