இண்டி கூட்டணிக்கு வந்த ஆபத்து : தப்பிக்குமா ? தடம் புரளுமா ?

இண்டி கூட்டணிக்கு வந்த ஆபத்து : தப்பிக்குமா ? தடம் புரளுமா ?

Share it if you like it

மக்களவை தேர்தலில், உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் இண்டியா கூட்டணியின்கீழ் போட்டியிட்ட சமாஜ்வாதி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பாஜகவினால் 33 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்தது.

இதனால் மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் எதிர்க்கட்சியாக இண்டியா கூட்டணி இடம்பெற உ.பி.யில் அவர்கள் வென்ற 43 இடங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

இந்நிலையில், இண்டியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தரபிரதேச மக்களவை உறுப்பினர்களில் 6 பேர் மீது உள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

இதில், காஜிபூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாதியின் அப்சல் அன்சாரி பாஜகவின் பராஸ்நாத் ராயை 1, 24, 861 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மீது ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரால் இம்முறை தேர்தலில் போட்டியிட முடிந்தது.

ஜூலை மாதம் அவரது வழக்கில் வழங்கப்படவிருக்கும் தீர்ப்புதான் அவரது புதிய எம்பி பதவி நீடிக்கப்படுமா அல்லது பறிக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும்.

இதேபோன்று அசம்கார் தொகுதியில் வென்ற தர்மேந்திர யாதவ் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவேளை அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்பி பதவியும் பறிபோகும். ஜான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சியின் பாபு சிங் குஷ்வாஹா மீது உள்ள சொத்து மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவரது எம்பி பதவியும் கைவிட்டுப்போய்விடும்.

சுல்தான்பூர் தொகுதியில் பாஜகவின் மேனகா காந்தியை தோற்கடித்த ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சந்தெளலி தொகுதியில் பாஜவின் மகேந்திரநாத் பாண்டேவை தோற்கடித்த சமாஜ்வாதியின் வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சஹாரன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தாக்கல் செய்திருப்பதால் அவரது எம்பி பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

இறுதியாக, உபியில் சுயேச்சையாக வென்ற பட்டியலின தலைவர் சந்திரசேகர் ஆசாத்மீது 30 வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதால் அவரது அரசியல் வாழ்க்கைக்கே பேராபத்து நேரும் அபாயம் உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *