‘போடா மயி…’: மீண்டும் ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்த பொன்முடி!

‘போடா மயி…’: மீண்டும் ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்த பொன்முடி!

Share it if you like it

கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவரை போடா மயி… என்று திட்டி மீண்டும் ஸ்டாலின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரின் பேச்சுக்கள் அறுவெறுக்கத்தக்க வகையில் இருந்து வருகிறது. உதாரணமாக, சீனியர் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன், எம்.பி. 2ஜி புகழ் ஆ.ராசா, பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்ட பலரையும் கூறலாம். குறிப்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிதான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். முகையூர் ஒன்றிய பெண் சேர்மனை, “ஏம்மா, நீ எஸ்.சி-தானே?” என்று மேடையிலே கேட்டு அவமானப்படுத்தினார். அதேபோல, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதை “ஓ.சி. பஸ்லதான் வந்தீங்க” என்று நக்கலாகப் பேசி கொச்சைப்படுத்தினார். கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவரை ஒருமையில் பேசினார். இப்படியான இவரது பேச்சுக்கள் கடும் சர்ச்சையானது.

இதையடுத்து, கடந்த மாதம் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “தினந்தோறும் காலையில் கண் விழிக்கும்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று என்ன பிரச்னையைக் கிளப்பி வைத்திருக்கிறார்களோ என்ற அச்சத்துடனேயே விழிக்கிறேன். நான் தூங்கி பல நாட்களாகி விட்டது. எனது உடலை பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்” என்று மிகவும் வேதனையுடன் பேசினார். ஆனாலும், மூத்த தலைவர்கள் யாரும் அடங்கியதாகத் தெரியவில்லை. அவ்வப்போது, எதையாவது எடக்குமடக்காகப் பேசி ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்கள். இதில், முக்கியமானவர் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி. இவர்தான் தற்போது கிராம மக்களில் ஒருவரை போடா மயி… என்று சொல்லி மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கி இருப்பதோடு, ஸ்டாலின் தூக்கத்தையும் கெடுத்திருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள அமைச்சர் பொன்முடியின் தொகுதிக்கு உட்பட்ட சித்தலிங்கமடம் ஊராட்சியை இரண்டாக பிரித்து, புதிதாக டி.எடப்பாளையம் ஊராட்சியை உருவாக்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, உள்ளாட்சி நாளையொட்டி நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தை கிராமமக்கள் புறக்கணித்தனர். மேலும், கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடும்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, கிராமமக்களை சமாதானப்படுத்தும் வகையில், நேற்று மதியம் அக்கிராமத்திற்கு வருகை தந்த அமைச்சர் பொன்முடி, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அவரை முற்றுகையிட்ட கிராமமக்கள், சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதனால், பொதுமக்களுக்கும் அமைச்சருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவரை பார்த்து, போடா மயி… என்று தடித்த வார்த்தையை பயன்படுத்தி ஒருமையில் திட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதை கூட்டத்தில் இருந்த யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, அமைச்சர் பொன்முடி இன்றைக்கும் முதல்வர் ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்து விட்டாரா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it