தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  35,941 நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத்திட்ட பொருட்கள் இருப்பு வைத்திட வேண்டும் !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 35,941 நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத்திட்ட பொருட்கள் இருப்பு வைத்திட வேண்டும் !

Share it if you like it

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி உட்பட அனைத்து பொது விநியோகத் திட்ட பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திட நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான நகர்வு பணிகள் அனைத்தும் நவம்பர் 5-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு :-

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 31.10.2023 அன்று மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலான துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தின் தொடக்கத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். தொடர்ந்து தலைமையுரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி உட்பட அனைத்து பொது விநியோகத் திட்ட பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திட ஏதுவாக தீபாவளி வரை அனைத்து நாட்களிலும் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இதற்கான நகர்வு பணிகள் அனைத்தும் நவம்பர் 5-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பொருட்கள் இருப்பு வைக்க பயன்படுத்தக் கூடிய அனைத்து சேமிப்புக் கிடங்குகளிலும் மழை நீர் கசிவு ஆகியவற்றால் பொருட்கள் சேதமாவது முற்றிலும் தவிர்க்கப்படுதல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். கொள்முதல் செய்யப்படும் நெல்லும் மழையினால் நனைந்து சேதமடையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் துறைவாரியான ஆய்வின்பொழுது, உணவுப் பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயலாற்றி, சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளில் ஒப்பந்தப்புள்ளி முடிவு செய்யப்பட்ட இனங்களின் பணிகள் துரிதப்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் மலைப் பிரதேசங்களில் பயன்பாட்டிலுள்ள நியாய விலைக்கடைகள் வன விலங்குகள் மூலம் தாக்கப்படுவதை தடுக்க முன் கதவுகளுக்கு இரட்டை அடுக்கு பாதுகாப்பு அமைத்திட பரிசீலித்திட வேண்டும் என்றும் இரண்டாயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளை துரித அடிப்படையில் உடனடியாக பிரிக்கப்படுதல் வேண்டும் என்றும் அரிசி கடத்தல் தடுப்பு நடவடிக்கையினைத் தீவிரப்படுத்துதல் வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.

ஆய்வுக் கூட்டத்தில் துறைத் தலைவர்கள் தங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். ஆய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் திரு. ஹர் சகாய் மீனா. இ.ஆ.ப. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. சு. பழனிச்சாமி. இ.ஆ.ப. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் திரு. ஆ. அண்ணாதுரை. இ.ஆ.ப., மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையின் காவல் தலைவர் திரு. கே. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Share it if you like it