ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழக பா.ஜ.க. சார்பில் உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் விபத்தில் சிக்கிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பும் வரைதுணைபுரியவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும், ரயில்வே பயணிகள் வசதி ஆலோசனைக் குழுவின் தேசிய உறுப்பினர் கே.ரவிச்சந்திரன்,
பிற மொழிப் பிரிவு மாநிலத் தலைவர் கே.பி.ஜெயக்குமார், ஊடகப் பிரிவு முன்னாள் மாநிலத் தலைவர் ஏஎன்எஸ்.பிரசாத் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒடிசா விரைந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்வர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.