தி.மு.க. கவுன்சிலரின் கணவரை கொல்ல முயற்சி: தி.மு.க.வைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் கைது!

தி.மு.க. கவுன்சிலரின் கணவரை கொல்ல முயற்சி: தி.மு.க.வைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் கைது!

Share it if you like it

தி.மு.க. கவுன்சிலரின் கணவரை கொலை செய்ய முயன்ற தி.மு.க. ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநின்றவூர் நகராட்சி கவுன்சிலராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த தேவி. இவரது கணவர் யோகானந்தம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநின்றவூரிலுள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த யோகானந்தனை, ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று தாக்க முயன்றது. இதைக் கண்ட யோகானந்தனின் கார் டிரைவர் ஆறுமுகம் தடுக்க முயன்றார். இதில், ஆறுமுகத்துக்கு கையில் வெட்டு விழுந்தது.

இதனிடையே, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதைக் கண்ட அக்கும்பல் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடி விட்டது. பின்னர், காயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இத்தாக்குதலில் ஈடுபட்டது திருநின்றவூர் நகராட்சியின் முன்னாள் ஒப்பந்ததாரர் லோகநாதன் என்பது தெரியவந்தது. இவரும் தி.மு.க. பிரமுகர்தான்.

மேலும், யோகானந்தனுக்கும், லோகநாதனுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்திருக்கிறது. இதனால், லோகநாதன் தனது நண்பர்களுடன் சேர்ந்து யோகானந்தனை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லோகநாதனை போலீஸார் கைது செய்தனர். மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்ட மேலும் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.


Share it if you like it