மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி !

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி !

Share it if you like it

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.

இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது.

மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய வீரமிக்க ‘மாமன்னன்’ சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர் முறைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: பிப்ரவரி 19, 1627

இடம்: சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா

பணி: பேரரசர்

இறப்பு: ஏப்ரல் 03, 1680

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள், 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை:

தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார்.

பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.

ஆட்சி முறை:

சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய
அவருக்கு ராமதாஸ் என்கிற குரு இருந்தார். ஒருநாள் சிவாஜி தன்னுடைய அரண்மனையுடைய மாடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர், தன்னுடைய குரு வீடு வீடாக பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சை எடுப்பதைப் பார்த்தார். அப்போது அவர் நினைத்தார், “என்னுடைய குரு எதற்காக வீதிவீதியாக பிச்சை எடுக்கிறார்?” நான் ஒரு ராஜா. என்னுடைய குரு வீதியில் பிச்சை எடுக்கக்கூடாது. அவர் வேறுமாதிரி இருக்க வேண்டும். அவர் தன்னுடைய உதவியாளரான பாலாஜியை அழைத்து, ஒரு ஓலையை எழுதி அனுப்பினார். இதை என்னுடைய குருவுடைய காலடியில் வைத்துவிட்டு வா. அவரும் அதை எடுத்து போய் குருவுடைய காலடியில் வைத்தார். ராமதாஸ் அதை கையில் எடுத்துப் பார்த்தார், பார்த்ததும் புன்னகைத்தார்.

மறுநாள் அவர் அரண்மனைக்கு வந்தார். அந்த ஓலையில் சிவாஜி இப்படி எழுதியிருந்தார். “என்னுடைய ராஜ்ஜியம் முழுவதையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னுடைய ராஜ்ஜியத்தையும் என்னையும் வைத்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.”

உடனே குரு ராமதாஸ் கேட்டார், “இப்போது உன்னுடைய ராஜ்ஜியத்தையே விட்டுவிட்டாய். என்னிடம் கொடுத்துவிட்டாய். இப்போது என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறாய்? அதற்கு சிவாஜி சொன்னார்,

“சத்குருவே நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நீங்கள் என்னுடைய சத்குரு. நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன். நான் விரும்புவதெல்லாம், உங்களிடம் இருந்து உங்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவ்வளவுதான் எனக்கு வேண்டும்.”

அப்போது ராமதாஸிடம் இன்னும் ஒரு பிச்சை பாத்திரம் இருந்தது. அவர் இதை எடுத்துக்கொள் என்றார். இருவரும் வீதிவீதியாக சென்று பிச்சை எடுத்தார்கள். அரசரும் குருவும் போனார்கள். மக்கள், குரு அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, ஏதோ பிச்சைக்காரர் என்று நினைத்து, ஏதோ வழக்கமாக கொடுப்பதைக் கொடுத்தார்கள். இப்போது அரசரே வந்திருக்கிறார், அவருக்கு பெரிய மரியாதையோடு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்தார்கள்.

இந்தக் காலத்தில்தான் பிச்சைக்காரர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு சமைத்த உணவு, மிச்சமான உணவு என்று எல்லாவற்றையும் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், அந்தக் காலத்தில் அப்படி செய்யவே மாட்டார்கள். அவர்கள் சமையல் பொருட்களைத்தான் கொடுப்பார்கள். அரிசி, பருப்பு இதுபோல. அதை வைத்து அவர்கள்தான் உணவை சமைத்து சாப்பிட வேண்டும்.

சத்ரபதி சிவாஜியின் காவிக்கொடியின் பின்னணி:

தங்களுடைய பிச்சை எடுக்கின்ற நேரம் முடிந்ததும், அவர்கள் ஆற்றங்கரைக்கு போனார்கள். அங்கே குரு அன்றைக்கு கிடைத்த உணவுப் பொருட்களை வைத்து ஏதோ எளிமையான உணவை சமைத்தார். அவர் சாப்பிட்டு முடித்த பிறகு மிச்சம் இருந்ததை, அரசர் சிவாஜி, அப்போது அவர் ராஜா இல்லை, அவர் சாப்பிட்டார். பிறகு அவர்கள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இருந்தார்கள்.

சிவாஜி புன்னகையோடு, “வெறும் 24 மணி நேரத்தில் என்னை பிச்சைக்காரனாக மாற்றிவிட்டீர்கள். என்னை இன்னும் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு ராமதாஸ் சொன்னார், அதற்கு ‘கிரோ’ என்று பெயர். அப்படியென்றால் ஒரு சிறிய காவித் துணி. அவர், தான் அணிந்திருந்த அந்த காவித் துணியை எடுத்து அதை சிவாஜியிடம் கொடுத்து, “இதை உன்னுடைய கொடியாக பயன்படுத்தி ராஜ்ஜியத்திற்கு திரும்பிப் போய் ஆட்சி செய். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது உன்னுடைய ராஜ்ஜியம் இல்லை. அது உன்னுடையது கிடையாது. அது உனக்கு சொந்தமில்லை என்று தெரிந்திருந்தால், உன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக மக்களுக்கு செயலாற்றுவாய். அப்படித்தான் நீ ஆட்சி செய்ய வேண்டும்” என்றார்.

அதனால் சிவாஜி எப்போதும் காவித் துணியை அல்லது காவிநிற கொடியை தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகுந்த ஞானத்தோடு முடிந்த அளவு சிறப்பாக நிர்வகித்தார்.
சிவாஜியின் தொடக்க காலம் நிர்வாகம், போர் பயிற்சி, சித்தாந்தங்கள் என்று வீரம் விளைந்த ஒரு ஆளுமையாக அவரை மாற்றியது. சிவாஜிக்கு இராணுவ பயிற்சிகளான குதிரை ஏற்றம், வாள் வீச்சு, யானை ஏற்றம் ஆகியவைகளை கற்பிக்க வல்லுனர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

சாய்பாய் நிம்பல்கர் என்பவரை 1640 ஆம் ஆண்டு சிவாஜி மணம் முடிந்தார். சிவனேரிக் கோட்டையை சுற்றியுள்ள சகாயத்ரி மலைகளில் சிவாஜி கால்படாத இடமில்லை. அந்த மலைகளை சுற்றியுள்ள பகுதிகளை ஒரு நாள் கைப்பற்றுவோம் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

மராட்டிய பேரரசை விரிவுபடுத்திய சிவாஜி:

இந்துக்களின் சுயாட்சி (மராத்திய மொழியில் ஹிந்தவி சுயராஜ்) என்கிற சித்தாந்தத்தில் சிவாஜி பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது மாவால் பகுதி நண்பர்களுடனும், சில படை வீரர்களுடனும் ஒரு இந்து கோவிலில் ஒரு இந்து பேரரசை நிறுவ உறுதிமொழி எடுத்துக்கொண்டார். தான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பவானிதேவியின் அருளுடனே தொடங்கி வெற்றி கண்டார். அவருடைய போர்முழக்கத்தையும் பவானி தேவிக்கே அர்ப்பணித்து “ஜெய் பவானி” என்றே முழங்கினார்.

தமது பிராந்திய சுல்தானாகிய பீஜப்பூர் சுல்தானின் பூனே’வை சுற்றியுள்ள கோட்டைகளின் மீது போர் தொடுக்கத் துவங்கினார் சிவாஜி. 1645ஆம் ஆண்டு தனது 17ஆம் வயதில் டோர்னா கோட்டையை தாக்கி கைப்பற்றினார். பிறகு 1647ஆம் ஆண்டு கொண்டனா மற்றும் ராஜ்கோட் கோட்டைகளை கைப்பற்றினார். பிறகு புனே தொடர்ந்து மேற்கத்திய கோட்டைகளையும் கைப்பற்றி தனது பேரரசை விரிவுபடுத்தினார். பிறகு நிறைய போர்களை அடுத்தடுத்து சந்தித்தார் சத்ரபதி சிவாஜி.

அதோடு மேற்கத்திய தொடர்களின் கோட்டைகளான சிங்கஹார் மற்றும் புரந்தார் என்று சென்ற இடமெல்லாம் போரில் வெற்றி கண்டு கோட்டைகளை கைப்பற்றி தமது பகுதிகளை மெல்ல விஸ்தரிக்க தொடங்கினார்.

பீஜப்பூர் சுல்தானிற்கு பெரும் அச்சுறுத்தலாக சிவாஜி இருந்ததால் சிவாஜியின் தந்தை சாஹாஜியை போலி காரணங்களை சொல்லி கைது செய்ய வருடம் 1648 ல் ஆணை ஒன்றை பிறப்பித்தார் சுல்தான்.

சிவாஜி எதிர்காலத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் நடத்தக் கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பின்னர் சாஹாஜி விடுதலை செய்யப்பட்டார். சஹாஜி இறக்கும் வரை சிவாஜி எந்த ஒரு போரிலும் ஈடுபடவில்லை.

சிவாஜி தன்னுடைய விஸ்தரிப்பு பணியை தந்தையின் மரணத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கினார். 1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.

சிவாஜியை கொல்ல நடந்த சூழ்ச்சி:

1964, 70 ஆம் ஆண்டுகளில் சூரத் நகரை தாக்கி சிவாஜி அவர்கள் சூரத் முழுவதும் கொள்ளை அடித்து தனது ராஜ்யத்தின் செல்வத்தினை பெருக்கிகொண்டார். பீஜப்பூர் சுல்தான் தன்னுடைய தலைமை தளபதியான அப்சல்கானை சிவாஜியிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஆணையிட்டார். ஒரு மலையின் மேல் ஒரு கூடாரத்தில் படைகளின்றி தனியாக இருவரும் சந்தித்து கொண்டனர். இது தனக்கு அமைக்கப்பட்ட பொறியாக கூட இருக்கலாம் என்று சிவாஜி சற்று எச்சரிக்கையாக இருந்தார்.

அவரது யூகம் சரியானது. பேச்சுவார்த்தையின் போது எதிர்பாராத தருணத்தில் தளபதி அப்சல்கானின் (பிச்சுவா) கத்தி சிவாஜியின் மார்பை பதம் பார்த்தது. நல்லவேளையாக,
சிவாஜி அணிந்திருந்த உள்கவசம் அவரை பத்திரமாக காப்பாற்றியது.

அதற்கு பதிலடியாக சிவாஜி மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான புலி நகங்கள் வடிவிலான உலோகத்தினால் அப்சல்கானை கொடூரமாக தாக்கினார். அப்சல்கானின் உயிர் பிரிந்தது. இன்றும் சிவாஜியின் புலிநக ஆயுதம் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.

தளபதி இல்லாத பீஜப்பூர் படைகளை நோக்கி தாக்குதல் நடத்தும்படி சிவாஜியின் சமிக்கைகளுக்காக காத்திருந்த தமது படைகளுக்கு கட்டளையிட்டார். பிரதாப்கர் யுத்தம் நடந்த வருடம் 1659. பிஜப்பூரின் படைகளை நாலாப்புறமும் சிதறி ஓட விட்டது சிவாஜியின் படைகள்.

ஆக்ராவிற்கான பயணமும், தப்பிப்பும்:

1666ல், அவுரங்காசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். ஆக்ரா அரண்மனையில் அவருக்கு கிடைத்தது அவமானங்களுக்கும் அதிர்ச்சியும் தான். இருவரையும் வீட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார் ஔரங்கசீப். ஔரங்கசீப்’பின் சூழ்ச்சி வலைக்குள் தான் விழுந்ததை உணர்ந்த சிவாஜி அங்கிருந்து தப்பிக்க ஆயத்தமானார். …

சிவாஜியை கைது செய்த மகிழ்ச்சியில் ஔரங்கசீப் ராஜ்ஜியத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அரண்மனை விழாக்கோலம் பூண்டது.அந்த நேரத்தில் சிவாஜி அவர்கள் ஔரங்கசீப்பிடம் தான் தினமும் செய்யும் பூஜையை நிறுத்தாமல் தொடர கோரிக்கை வைத்தார்.

கூடை கூடையாக பூ ,இனிப்புகள் வேண்டும் என்றும் கேட்க ஔரங்கசீப்பும் அதற்கு ஒப்புக்கொள்ள, அதன்படி சிவாஜியின் பூஜை ஆரம்பமானது. சில நாட்களுக்கு பின், அரண்மனைக்கு வரும் பூக்கூடையில் ஒன்றில் சிவாஜியும், மற்றொரு கூடையில் சம்பாஜியும் பதுங்கி தப்பி வெளியேறிய வருடம் 1666. பூனாவில் உள்ள கோட்டைக்கு சிவாஜி திரும்பியதை மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடினர். பின்னர் சமாதான ஒப்பந்தம் சுமார் வருடம் 1670 வரை நீடித்தது.

மொகலாயர்களுடன் போர்:

அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.
சிவாஜி சத்ரபதியாக முடிசூடினார்:

மொகலாய இளவரசர் பகதூர்ஷாவுடன் சிவாஜிக்கு இருந்த நட்பினால் ஔரங்கசீப்-க்கு பிறகு சந்தேகம் ஏற்பட்டது. இருவரின் ஒற்றுமையினால் தம்முடைய ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என்று எண்ணினார். மீண்டும் ஔரங்கசீப் யுத்தத்தை தொடங்கினார். இம்முறை போரிட்ட சிவாஜி இழந்த பெரும் பகுதிகளை நான்கே மாதங்களில் மீட்டார். பூனா மற்றும் கொங்கன் பிரதேசங்கள் முழுமையாக தம் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் சிவாஜி ராஜ்ஜியத்தை முழு ஹிந்து பேரரசாக அறிவித்தார்.
மராத்திய சாம்ராஜ்ய பேரரசராக ஜூன் 6, 1674 அன்று ராய்காட்டில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது.

சுமார் 50,000பேர் கூடிய நிகழ்வில் மாமன்னர் சிவாஜிக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டன. சத்ரபதி (தலைசிறந்த மன்னர்), சககர்தா (புதிய சாகப்தத்தை உருவாக்கியவர்), சத்ரிய குலவந்தாஸ் (சத்ரியர்களின் தலைவன்), ஹைந்தவ தர்மோதாரக் (இந்து தர்மத்தை நிலை நிறுத்துவுவபர்) என்று பல பட்டங்கள் அளிக்கப்பட்டன.

சிவாஜியால் கைப்பற்றப்பட்ட வேலூர் மற்றும் செஞ்சி கோட்டை:

மராத்தியர்கள் சிவாஜியின் கட்டளைப்படி தக்காண பகுதிகள் முழுவதும் இந்து சுயாட்சி கொள்கைப்படி ஆட்சி நடத்தினர். அதில்ஷாவின் பகுதிகளான தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையும், செஞ்சி கோட்டையும் சிவாஜியால் கைப்பற்ற பட்டவையே. பின்பு தமது சகோதரர் வெங்கோஜியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி வெங்கோஜி ஆண்டு வந்த தஞ்சாவூர் மற்றும் மைசூர் பகுதிகளுடன் அவைகளை இணைத்தார். தக்காண பகுதிகள் முழுவதும் மொகலாயர்களையும், சுல்தான்களையும் விரட்டி இந்து மக்கள் சுயாட்சி அமைய வேண்டும் என்கிற சிவாஜியின் லட்சியம் நிறைவேறியது.

சிவாஜியின் இலக்கு பிற மத ராஜியங்களை அழிப்பதல்ல..அடிமைத்தனமாக மக்களை வழிநடத்தாத ஒரு சுதந்திர ஹிந்து சாம்ராஜ்யம் உருவாக்க வேண்டும் என்பதே அவரின் சித்தாந்தத்தின் அடிநாதமாக இருந்தது.

இறப்பு:

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார். தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார்.

அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

-Articles by திருமதி.சுபா பாலாஜி


Share it if you like it