ஈரோடு ராமசாமிக்கு மாற்றாகத் திகழ்ந்த சித்பவானந்தர்!

ஈரோடு ராமசாமிக்கு மாற்றாகத் திகழ்ந்த சித்பவானந்தர்!

Share it if you like it

தமிழ்நாட்டில் நாத்திக வாதத்தை வளர்த்த ஈரோடு ராமசாமியின் தாக்கத்துக்கு மாற்றாக, அவரது காலத்திலேயே ஆக்கப்பூர்வமாக செயல்பட்ட ஆன்மிகவாதிதான் சித்பவானந்தர்.

சுவாமி சித்பவானந்தர் (1898-1985)பொள்ளாச்சிக்கு அருகே செங்குட்டைப்பாளையம் எனும் கிராமத்தில் கவுண்டர் குலத்தில் பிறந்தவர். முன்னாள் மாநில, மத்திய அமைச்சர்/ஆளுநர் பதவிகள் வகித்து, காங்கிரஸில் பெரிதும் மதிக்கப்பட்ட ஓர் தலைவராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் சித்தப்பா. நல்ல ஆங்கிலக் கல்வி பெற்றவர் சின்னு எனும் பெயர் படைத்த சித்பவானந்தர்; இவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் போதனைகளாலும், சுவாமி விவேகானந்தரின் வாழ்வு, வாக்கினாலும் ஈர்க்கப்பட்டார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கல்கத்தா (பேளூர்) ராமகிருஷ்ண மடத்தில் பிரம்மச்சாரியாகச் சேர்ந்தார்; ராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தரால் சன்னியாச தீட்சை வழங்கப்பெற்று துறவியானார்.

ஊட்டியில் ராமகிருஷ்ணா மடத்தின் கிளையைத் துவக்கி 14 ஆண்டுகள் அதன் தலைவராகப் பணியாற்றினார் சித்பவானந்தர். அக்காலத்தில், அவர் சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். மைசூர் மகாராஜா தர்பாரில் ராஜகுருவாக விளங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய ஐயரிடமிருந்து வேதாந்த (உபநிஷத்) பாடங்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். மகாத்மா காந்தி தென்நாட்டுக்கு வந்திருந்தபோது, அவரைத் தமது ஊட்டி மடத்திற்கு விஜயம் செய்ய வைத்தார் சித்பவானந்தர். மகாத்மாவுடன் கிட்டிய அந்தத் தொடர்பின் பயனாய், அரிஜன மக்களின் மேம்பாட்டுக்காக ஏதேனும் வழிவகை செய்யும் ஆர்வம் அவர் மனதில் வித்தாய் விழுந்தது. ஊட்டியின் சுற்று வட்டாரங்களில் உள்ள பல கிராமங்களுக்கும் சுற்றி வந்து, பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோரிடையே தெய்வ பக்தி, ஆன்மிகம், ஒழுக்கமிகு வாழ்வு இவற்றை போதித்தார். சுற்றுவட்டார ஊர்களிலும் நகரங்களிலும் கீதை வகுப்புகள் நடத்தினார்.

சென்னை ராமகிருஷ்ண மடத்தின் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்’ பத்திரிகை ஆசிரியராக சில காலம் பணி செய்து ஏராளமான கட்டுரைகள் எழுதினார்; கூடவே, ராமகிருஷ்ணரின் சரிதம், உபதேசங்கள் உட்பட பல தமிழ் நூல்களும் எழுதி, ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் செய்தி தமிழ்நாட்டில் பரவப் பெரும் பங்கு வகித்தார். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொண்டு பகவான் ரமண மகரிஷி, ஸ்ரீ நாராயண குரு, ரிஷிகேசம் சுவாமி சிவானந்த சரசுவதி ஆகிய சமகால மகான்களைத் தரிசித்தார். இமய யாத்திரை மேற்கொண்டு பத்ரி, கேதாரம், கைலாயம், அமர்நாத் போன்ற புனிதத் தலங்களுக்கும் சென்று சிலிர்ப்புண்டாக்கும் அனுபவங்களைப் பெற்றார்.

திருச்சி திருப்பராய்த்துறை

சுவாமி சித்பவானந்தர் 1940-ம் ஆண்டு தனியே பிரிந்து வந்து, திருச்சிக்கு அருகில் திருப்பராய்த்துறை என்னும் சிவத் தலத்தில், தனியே தவ வாழ்வு மேற்கொண்டார். அவரது அன்பினாலும், ஆன்மீகத் தாக்கத்தாலும் கவரப்பட்டு, பலரும் அவரை நாடி வந்து உதவிகள் நல்க முன்வந்தார்கள். உள்ளூர் மக்களின் வேண்டுகோள், ஆதரவு இவற்றுக்கிணங்க , திருப்பராய்த்துறைக் கோவிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து ஒரு ஆரம்பநிலைப் பள்ளியை முதலில் தொடங்கித் தம் கல்விப் பணிக்குப் பிள்ளையார் சுழியிட்டார் சித்பவானந்தர். பின் உள்ளூரிலேயே ஒரு இடைநிலைப் பள்ளியையும் துவங்கினார். அதேசமயம், ஆன்மிக சாதகர்களுக்கு ஒரு தபோவனமும், சாதி, இன, மத பேதமின்றி குழந்தைகள் வந்து தங்கிப் படித்து, உலகியல் கல்வியோடு கூடவே, ஒழுக்கம், பண்பாடு, பக்தி, கலாசாரம், (பகவத் கீதை முதலான) சாத்திரங்களும் படிக்க, ஒரு குருகுலமும் தொடங்கவேண்டும் என்று களமிறங்கினார்.

தொடர்ந்து, 1946-ம் ஆண்டு செட்டியார்கள் உதவியுடன் காவிரிக் கரையில் பரந்த நிலப்பரப்பு ஒன்றை வாங்கி ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை திருப்பராய்த்துறையில் தொடங்கினார் சித்பவானந்தர். அங்கேயே, பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லாத் தரப்பு மாணவர்களும் வந்து தங்கிப் படிக்க குருகுலம் எழுந்தது. அதுவே ஸ்ரீ விவேகானந்தா வித்யாவன குருகுலம். இங்கு மாணவர்களுக்கு காயத்ரி மந்திர ஜபத்தைக் கட்டாயமாக்கினார்; சம்ஸ்கிருதம் கற்பித்தார்; பகவத் கீதையை மனப்பாடம் செய்ய வைத்தார்; தேவாரம், திருவாசகம், திருக்குறள் படிக்க வைத்தார். பள்ளியில் உலகியல் கல்வி கற்பதோடு கூடவே, விளையாட்டு, தோட்ட வேலை, நீச்சல், சுற்றுப்புறம் சுத்தமாக்கல், சமையற்கலை இவற்றையும் கற்பித்தார்.

பிராமணர்களின் சில செயல்பாடுகளில் அவர் அதிருப்தி கொண்டிருந்தாலும், ஒரு மகாத்மாவாக விளங்கிய சித்பவானந்தர், பெரியாரிசத்தில் காணும் வெறுப்பு வழியை ஒழித்து அன்பான, ஆக்கப் பூர்வமான பாதையை பிற்பட்டோர் நலத்தில் காட்டினார். ”ஒரு நீளமான கோட்டைச் சின்னதாக ஆக்க வேண்டுமானால், அதற்கு, அந்தக் கோட்டை அழிக்க வேண்டியதில்லை; அதற்குப் பக்கத்திலேயே மேலும் நீளம் அதிகமுள்ள மற்றோரு கோட்டை வரைந்துவிட்டால், முதற்கோடு சிறியதாகிவிடுமல்லவா? அது போலத்தான் இப்போது தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், உயர்ந்த நிலையிலுள்ளவரை அழிக்க முற்படாமல், தம்மை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டும். பிராமணர் ஏன் உயர்ந்த நிலையில் உள்ளார்கள் என்பதை அவர்களது நல்ல குண நலன்களைக் கண்டு கற்றுக்கொள்ளுங்கள்; பிராமணர்கள் மிகப் பலரும் ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; தெய்வ பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்; கல்வியைக் கண்போல நினைக்கிறார்கள்; சம்ஸ்கிருதம் கற்கிறார்கள்; நேர்மையானவர்களாகவும் சுய கட்டுப்பாடு மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்; புகை, குடி போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை; சுத்தம் பேணுகிறார்கள்; கெட்ட பேச்சுக்கள் பேசுவதில்லை. அவர்களில் ஒழுக்கமும் சத்தியமும் உள்ளவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மற்ற சாதியினர் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்; அவர்களை எதிரிகளாகக் காணாமல் அவர்களைத் தாண்டி வளர்ந்து விட முயலவேண்டும்” என்று போதிப்பார்.

அரசாங்கப் பாடத்திட்டப்படி நடத்தப்படும் கல்வியோடு கூடவே, வித்யாவன மாணவர்களுக்கான அற போதனைக்கான பாடத்திட்டத்தை உருவாக்கினார்; தாமே பல சமயங்களில் அந்த ஆசிரியர் பொறுப்பை ஏற்று மாணவர்களை வழி நடத்தினார். அவர் பாடத்திட்டத்தில், ராமாயண மகாபாரதக் கதைகள், அவதார புருஷர்களின்/ சமயச் சான்றோர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், பஞ்சதந்திரக் கதைகள், ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற நூலகளிலிருந்து அறவிளக்கங்கள், சரித்திரப் பெரு நிகழ்வுகள், உபனிடதம், ஐம்பெருங்காப்பியங்கள், பிற நாட்டு இலக்கியஙளிலிருந்து எடுத்த கதைகள், உவமைக் கதைகள், நீதி நெறிக்கதைகள் என்று பலவும் அடங்கியிருந்தன. மாணவர்களை, ராமாயண, மகாபாரத, புராணக்கதைகளை கலைவிழாக்களில் நாடகமாக நடிக்கப் பெரிதும் ஊக்குவித்தார். இவரது குருகுலத்தின் புகழ் வெளியுலகத்தில் ஓங்க ஓங்க, சில ‘கருப்புச் சட்டைக் காரர்கள்’ கூடத் தம் பிள்ளைகளை குருகுலத்தில் சேர்க்க ஆரம்பித்தார்களாம்.

தாழ்த்தப்பட்டோருடன் ஆலயப்பிரவேசம்

1948-ம் அண்டு வாக்கில் சுவாமிகள் சேரிகளில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சிறார்களை ஒன்று கூட்டி, அவர்களைக் குளிப்பாட்டிப் புத்தாடை அணிவித்து, வித்தியாவன மாணவர்களுடன் சேர்ந்து திருப்பராய்த்துறைக் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அர்ச்சகர்களும் பிற உள்ளூர்ப் பிரமுகர்களும் தெரிவித்த எதிர்ப்புகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் சிறிதும் அஞ்சவில்லை சித்பவானந்தர். அப்போதிருந்த காமராசரின் அரசாங்கம், மிகப் பெரிய அளவில் பள்ளிகளைத் திறந்து கல்விச் செல்வத்தை சாமானியர்களுக்குப் பெருமளவில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நிறைய ஆசிரியர்களின் தேவை ஏற்பட்டது. அதனால், அரசாங்கம் சித்பவானந்தரை ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி தொடங்க வேண்டுகோள் விடுத்து, மானியமும் தர முன்வந்தது. அந்த ஊக்குவிப்பின் படி, தபோவனத்தில் ஓர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை 1955-ல் தொடங்கினார் சித்பவானந்தர்.

ஒழுக்கமும், அறிவும் இரு கண்கள் எனக் கொண்ட சுவாமிகள், மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களுக்கும், தெய்வ நம்பிக்கை, பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடு இவை மிக அவசியம் என்பதில் மிக உறுதியாய் இருந்தார். ஆசிரியர்கள் முன்மாதிரியாக விளங்கினால் தான், மாணவர்களுக்கும் அவர்கள் போதிக்க முடியும். ஆகவே, ஆசிரியர் பயிற்சி பெறுவோரும், தபோவன முறைகளுக்கு உட்பட்டு, விடியும் முன் எழுதல், பிரார்த்தனை, உடற்பயிற்சி, மந்திரம் சொல்லுதல், ஒழுக்க நியமங்களைப் பேணுதல், நெற்றியில் திருநீறு அணிதல் போன்றவற்றைக் கடைப்பிக்கவேண்டும் என்கிற முன் விதிகளை முன்கூட்டியே தெரிவித்த பின்னரே, ஆசிரியர் கல்லூரியில் சேர்க்கைகள் நிகழ்ந்தன. ஆனால், தமிழ்நாட்டில் அக்காலகட்டத்தில் மேலோங்கியிருந்த பெரியார் இயக்கம், திராவிட இயக்கம் இவற்றின் பாதிப்பால், இக்கல்லூரியில் சேர்ந்த இளைஞர்கள் பலர், இத்தகைய (இந்து மதம் சார்ந்த) நியமங்கள், கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் நடத்தத் தொடங்கினர். தம் கொள்கைகளிலும், ஒழுக்க நியதிகளிலும் விடாப்பிடியான நெஞ்சுறுதியுடன் அசையாமல் இருக்கும் சுவாமிகள், சமாதான முயற்சிகள் பயன் தராமல் போகவே, கல்லூரியை மூடிவிடத் தீர்மானித்து, அதனை உறுதியுடன் செயல்படுத்திவிட்டார்!

சாமானியர்க்கும் ஆன்மிகம்

சாதி பேதமின்றி, தமிழில் சாத்திரங்களையும், யோகங்களையும் அறியும் ஆர்வமுள்ள எல்லா இந்துக்களும் பயனடையும் விதத்தில் சுவாமிகள் தொடங்கிய ஆன்மிக முகாம்கள் தான் அந்தர் யோகங்கள். ஆரம்பத்தில், திருப்பராயித்துறை தபோவனத்தில் வைத்து அன்பர்கள் வந்து 3 நாட்கள் தங்கிப் பங்குபெரும் அந்தர்யோகங்களை சுவாமிகள் நடத்தினார். விடியுமுன் எழுந்து பிரார்த்தனை முதலான ஆசிரம நடைமுறைகளில் பங்கெடுத்து, நாம சங்கீர்த்தனம், ஜபம், தியானம், மௌனம், ஆன்மிக சத்சங்கம், வினா-விடை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் பங்குபெறும் பயிற்சி முகாம்களே இந்த அந்தர்யோகங்கள். பக்தர்களின் வசதியை அனுசரித்து பின் அது ஒரு நாள் நிகழ்ச்சியாக மாறியது. இந்த அந்தர்யோகங்கள் ஆன்மிக ஆர்வலர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறவே, பல வெளியூர்களிலிருந்தும் சுவாமிகளுக்கு அவ்வூர்களில் அந்தர்யோகம் நடத்த அழைப்புகள் வர ஆரம்பித்தன. நாத்திக வாதம் பெரிதும் பரவத் தொடங்கியிருந்த விருதுநகர் போன்ற ஊர்களில், அக்காலத்தில் அந்தர்யோகம் பெரிதும் மக்களால் வரவேற்கப் பட்டது. இந்த அந்தர்யோகங்களில் பங்கு பெற்றதன் பயனாய். நாத்திக வாதத்தால் மதி மயங்கியிருந்தவர்கள் பலரும் கூட அதனை விட்டு, இந்து மதத்தின் சாரமான வேர்களைக் கண்டு புரிந்துகொண்டு தம் மயக்கத்திலிருந்து விடுபட்டனர்.

1940 முதலேயே சித்பவானந்தர் பகவத் கீதை உரைகள் நிகழ்த்தி வந்தார். பின்னர், தபோவனம் தொடங்கிய பின், அந்தர்யோக வகுப்புகள் போலவே, சுவாமிகள் பகவத் கீதைப் பிரசங்கங்களையும் பல ஊர்களிலும் மேற்கொண்டார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. பகவத் கீதைக்கு விரிவான விளக்க உரையையும் அவர் எழுதினார். தமது தபோவனத்திலேயே அச்சுக்கூடம் அமைத்து இந்த பகவத் கீதை உட்பட பற்பல ஆன்மீக நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். ‘தர்ம சக்கரம்’ எனும் ஆன்மிக மாத இதழும் அவருடைய எழுத்துகளைத் தாங்கி வெளிவரத் தொடங்கியது. இவரது பகவத் கீதை விளக்க உரையின் முதல் பதிப்பு 1951-ம் ஆண்டு வாக்கில் வெளி வந்தது. பிறகு எத்தனையோ மறுபதிப்புகள்! மிகக் குறைந்த விலையிலேயே விற்கப்பட்ட இந்த கீதா விளக்க உரை தமிழ்நாடெங்கும் மிகப் பிரபலம் ஆனது. தமிழில் வெளிவந்த பகவத் கீதை உரைகளிலேயே இன்றளவும் மிக அதிகம் விற்பனையாவது சித்பவானந்தரின் உரையே எனச் சொல்லலாம்.

ஆன்மிகப் புரட்சி

பெண் கல்வி, அதன் மூலம் சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் இவற்றில் பெரும் அக்கறை கொண்டிருந்தார் சித்பவானந்தர். உலகியலிலேயே உழன்றுகொண்டிருக்காமல், ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஆன்மிக முன்னேற்றம் அடைய முடியும், அடைய வேண்டும் என்று விரும்பினார் சுவாமிகள். விவேகானந்தர் காட்டிய துறவும் தொண்டும் எனும் ஆன்மிக மார்க்கத்தில் விவேக வைராக்கியம் மிகுந்த பெண்களும் பயணிக்கும் விதத்தில் சேலம் சாரதா சமிதியைத் தொடங்கி, தீரம் மிக்க பெண்மணிகளுக்கு சன்னியாச தீட்சை கொடுக்கும் ஒரு பெரும் ஆன்மிகப் புரட்சியைத் தமிழ்நாட்டில் செய்தவர் சுவாமிகள்.

சித்பவானந்தர், தாய்மொழி வழிக் கல்விக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். ஆயினும், மாணவர் நலன், தேச நலன் இவற்றில் அக்கறை மிகுந்த சுவாமிகளுக்கு, இந்தி மொழி எதிர்ப்பு உடன்பாடானதல்ல. ஆகவே அவருடைய கல்வி நிலைய மாணவர்கள் எவரும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. இந்துமத ஆன்மிகம், ஒழுக்கம் சார் கல்வி என்று வரும்போதே, என்னதான் பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயக் கல்வி மேம்பட்டுக்காக சுவாமிகள் செயல்பட்டாலும், தி.மு.க ஆட்சி தமிழ்நாட்டில் மலர்ந்த பிறகு அவர் பல மறைமுக எதிர்ப்புகள், தடைகளைச் சந்திக்க வேண்டித்தான் வந்தது. கல்லூரிகள் தொடங்குவதில் அரசு அனுமதி பெறப் பல தடைகள், திருநெல்வேலிப் பகுதிகளில் கல்வித் துறையில் கிறித்துவ ‘லாபி’ களின் செல்வாக்கு கூடுதல் இருந்ததால் இந்துமத சார்புள்ள பள்ளி, கல்லூரிகள் எழுவதில் அவர்கள் உண்டாக்கிய முட்டுக்கட்டைகள், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுவாமிகளின் ஆசிரமக் கிளைகளின் செயல்பாடுகளில் தரப்பட்ட சில இடைஞ்சல்கள் இவற்றையெல்லாம் சுவாமிகள் மிகுந்த பொறுமையோடு எதிர்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். இணக்கம்

சர்வமத சமத்துவ நோக்குள்ள ஸ்ரீராமகிருஷ்ண பாரம்பரியத்தில் வந்த சுவாமிகள் ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்கம்) தலைவராயிருந்த குருஜி கோல்வாக்கரை சேலத்தில் சந்தித்து தமது ஐயங்கள் பலவற்றிற்குத் தெளிவைத் தேடினார். இந்தத் தொடர்பின் விளைவாக, இந்து மத எதிர்ப்புணர்வுடன் கூடிய நாத்திக வாதத்தின் தாக்கத்தின் ஒரு மோசமான பக்க விளைவு சுவாமிகளுக்குத் தெளிவாகியது. ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்’ வகையில் தமிழ்நாட்டில் விஷம்போல பரவ ஆரம்பித்த (இஸ்லாம், கிறித்துவ) மத மாற்றங்கள் சுவாமிகளின் சிந்தனைப் போக்கைப் மாற்றி, ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்க வைத்தது. அதன் விளைவாக, திருவேடகக் கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஷாகா செயல்பட ஏற்பாடு செய்தார் சுவாமிகள். பின் பலவகைகளிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு பெருமளவில் ஆதரவும், ஒத்துழைப்பும் தரத் தொடங்கினார் சுவாமிகள். ஈரோடு ராமசாமியின் நாத்திகவாதமும், எதிர்ப்பு வாதமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கங்களைக் கண்முன்னே கண்டாலும், சித்பவானந்தர் பெரியாருக்கு எதிராகவோ, கண்டித்தோ ஏதும் பேசியதில்லை. சித்பவானந்தரின் செயல்பாடுகளையும் பெரியார் கண்டுகொண்டுதான் இருந்தார். சுவாமி சித்பவானந்தரின் நீண்ட நெடிய செயல் தீரம் மிக்க ஆன்மிக வாழ்க்கை 1985-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.


Share it if you like it