மறைக்கப்பட்ட இந்திய மன்னர்களின் வரலாற்று: அமித்ஷா வருத்தம்!

மறைக்கப்பட்ட இந்திய மன்னர்களின் வரலாற்று: அமித்ஷா வருத்தம்!

Share it if you like it

முகலாயர்கள் குறித்த வரலாற்று புத்தகங்களை மட்டுமே எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் இந்திய மன்னர்கள் குறித்த வரலாற்றில் கவனம் செலுத்தவில்லை என்று அமித்ஷா வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், “இந்தியாவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் முகலாயர்கள் குறித்து மட்டுமே அதிக புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். பாண்டிய மன்னர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி நடத்தி இருக்கிறார்கள். அஸ்ஸாமைச் சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டுகளும், பல்லவர்கள் 600 ஆண்டுகளும், சோழர்கள் 600 ஆண்டுகளும் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். மேலும், ஆப்கானிஸ்தான் முதல் இலங்கை வரை மவுரிய பேரரசு 550 ஆண்டுகள் ஆட்சி நடத்தி இருக்கிறது. சாதவாகனர்களின் ஆட்சி 500 ஆண்டுகளும், குப்தர்கள் ஆட்சி 400 ஆண்டுகளும் நீடித்திருக்கிறது.

குப்த வம்சத்தைச் சேர்ந்த சமுத்திர குப்தர் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க கனவு கண்டார். ஆனால், அவரைப் பற்றி எந்த புத்தகமும் எழுதப்படவில்லை. மராட்டிய மன்னர் சிவாஜி, முகலாயர்களுக்கு எதிராக தீரத்துடன் போராடினார். ராஜஸ்தானின் மேவார் பகுதி மன்னர் பப்பா ராவல், இந்தியாவுக்குள் நுழைய முயன்ற முகலாயர்களை தோற்கடித்து விரட்டினார். ஆனால், அவரைப் பற்றியும் எந்த புத்தகமும் இல்லை. அதேபோல, சீக்கிய குருக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் குறித்து ஆய்வு செய்து உண்மையான வரலாற்றை எழுத வேண்டும். கடந்த 1857-ம் ஆண்டு முதலாவது சுதந்திரப் போராட்டம் குறித்து வீரசாவர்க்கர் புத்தகம் எழுதினார். அவர் மட்டும் புத்தகம் எழுதாமல் இருந்திருந்தால் அந்தக்கால வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவை ஆட்சி செய்த பழங்கால மன்னர்கள் குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்தாதது ஏன்? இனிமேலாவது அவர்கள் குறித்து அதிக புத்தகங்களை எழுத வேண்டும். அவ்வாறு புத்தகங்கள் எழுதப்பட்டால், நாம் நம்பிக் கொண்டிருக்கும் பல வரலாறுகள் தவறு என்பது புரியும். உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இதற்கான பணிகளை வரலாற்று ஆசிரியர்கள் இப்போதே தொடங்க வேண்டும். அந்நியர்களுக்கு எதிரான ராஜஸ்தான் மன்னர்கள் குறித்த புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளோம். இதனை எழுதிய மருத்துவர் ஒமேந்திர ரத்னுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மூலம் ராஜஸ்தானின் உண்மையான வரலாறு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அரசு தரப்பில் வரலாறு எழுதப்பட்டால் பல்வேறு சர்ச்சைகள் எழும். எனவே, இந்திய மன்னர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புத்தகங்களை எழுத வரலாற்று அறிஞர்கள் முன்வர வேண்டும்” என்றார்.


Share it if you like it