டெல்லி துணை முதல்வர் சிசோடியா ராஜினாமா!

டெல்லி துணை முதல்வர் சிசோடியா ராஜினாமா!

Share it if you like it

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் டெல்லி அரசில், கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டது. மேலும், மதுக்கடை உரிமையாளர்களே மதுவின் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வழங்கலாம். மதுபானங்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யலாம். அதிகாலை 3 மணி வரை கடைகளை திறந்திருக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியது உட்பட பல்வேறு விவகாரங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனாவிடம் அறிக்கை அளித்தார். இதையடுத்து, இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு ஜூலை மாதம் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி ஊழல் வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட மணீஷ் சிசோடியாவை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. நீதிபதி நாக்பாலும், மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். எனவே, தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால், ஜாமீன் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி, அவரது மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. இதன் தொடர்ச்சியாக, டெல்லி துணை முதல்வர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்திருக்கிறார். அதேபோல, ஊழல் புகாரில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும், தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இருவரது ராஜினாமாவையும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.


Share it if you like it