சிறுவனுக்கு பாலியல் தொல்லை… புகார் கொடுத்ததால் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பங்குத்தந்தை!

சிறுவனுக்கு பாலியல் தொல்லை… புகார் கொடுத்ததால் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பங்குத்தந்தை!

Share it if you like it

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பங்குத் தந்தை மீது புகார் கொடுத்ததால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாகக் கூறி மைக் செட் ஆபரேட்டர் மாவட்ட கலெக்டரிடம்  குடும்பத்தினருடன் வந்து புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் – நத்தம் சாலையில் உள்ள வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரான்சிஸ். இவர், அதே பகுதியில் மைக் செட் மற்றும் டெக்கரேஷன் ஜாமான்களை வாடகைக்கு விட்டு வருகிறார். மேலும், அப்பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திருவிழா காலங்களில் மைக் செட், லைட் உள்ளிட்ட டெக்கரேஷன் வேலைகளை செய்து வருகிறார். இந்த சூழலில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த அருள் பிரான்சிஸ், கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், “எங்கள் ஊரில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் பீட சிறுவனாக இருக்கும் (கோவில் சிஷ்யப் பிள்ளை), 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு ஆலய பங்குத்தந்தை அடைக்கலராஜ் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து அச்சிறுவன் என்னிடம் கூறினான். நான் சிறுவனின் தாய்மாமன் உதவியுடன் 1098 என்ற சிறார் பாதுகாப்பு மைய எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தேன். மேலும், மனித உரிமை ஆணையம், சாணார்பட்டி காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் சிறுவனை அழைத்துச் சென்று நேரில் புகார் அளித்தேன்.

அதேபோல், திண்டுக்கல் திருச்சபைக்கு தலைமை இடமான ஆயர் இல்லத்திலும் புகார் அளித்தேன். இதன் பேரில், நடந்த சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தினார்கள். இதனால் ஆத்திரமடைந்த பங்குத்தந்தை அடைக்கலராஜ், ஊர் நாட்டாமை உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களோடு சேர்ந்து கொண்டு, எங்கள் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டார்கள். இதனால் எனது தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகளில் யாரும் கலந்து கொள்வதில்லை. எங்கள் தோட்டத்திற்கு யாரும் வேலைக்கு வருவதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

பங்குத்தந்தை செய்த தவறை தட்டிக் கேட்டதற்காக ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it