நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கில், திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண் !

நியோமேக்ஸ் நிதி மோசடி வழக்கில், திமுக நகர செயலாளர் செல்வக்குமார் நீதிமன்றத்தில் சரண் !

Share it if you like it

மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து, சகாயராஜா ஆகிய 4 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென விமான நிலையங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனிடையே நியூ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் இழந்த நபர்கள் உரிய புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 11 பேர் கைது செய்யப்பட்டு 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பாக கம்பத்தைச் சேர்ந்த திமுக தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் என்பவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாராஜன் முன்னிலையில் சரண்டைந்தார்., இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், திமுக நகர செயலாளர் செல்வக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it