இப்படி பேசுவது ஒரு முதல்வருக்கு அழகா..? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பளார்!

இப்படி பேசுவது ஒரு முதல்வருக்கு அழகா..? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பளார்!

Share it if you like it

தி.மு.க.வினரை சீண்டிப் பார்க்க வேண்டாம். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், இப்படி பேசுவது ஒரு முதல்வருக்கு அழகா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜ.க. தலைவர் அண்ணாமலை.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுவது கட்சி மேடைகளிலே கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், நீங்கள் இப்படி பேசுவது நீங்கள் வகிக்கும் முதலமைச்சர் என்ற பதவிக்கு உகந்ததா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். சட்ட திட்டங்கள் விசாரணை நடைமுறைகள் அனைத்தும் தெரிந்த ஏறத்தாழ 30 ஆண்டுகள் சட்டமன்ற அனுபவம் மிக்க நீங்கள், 5 கட்சி மாறிவந்த ஒருவரை காப்பாற்ற இப்படி இரண்டாம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா?

தமிழகத்தில் எத்தனையோ குற்றங்கள் நடந்தபோதுகூட வாய் திறக்காத நீங்கள், கரூரில் கடந்த மே 26-ம் தேதி சோதனைக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டபோது கண்டனம் கூட தெரிவிக்காத நீங்கள், இக்குறிப்பிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்காக இப்படிப் பொங்குவது நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகா? கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, குளித்தலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நீங்கள் குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்கக் கூறிய வழக்குகளில் ஒன்றில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 7 வருடங்களில் என்ன மாறியிருக்கிறது? நீங்கள் கோரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதில் உங்கள் கட்சி சார்பாக வரவேற்றல்லவா இருக்க வேண்டும்.

அதேபோல, சி.பி.ஐ. விசாரணைக்கு முன் அனுமதி வேண்டுமென்று அவசர அவசரமாக முடிவெடுத்துள்ளீர்கள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது கடந்த பல ஆண்டுகளில், அதாவது, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி உள்ளபோதே எத்தனை முறை சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளீர்கள் என்பது நினைவு இருக்கிறதா? நீங்கள் இப்போது ஆளுங்கட்சியான பின்பு, சி.பி.ஐ. உங்கள் அனுமதி பெற்றுத்தான் உள்ளே வர வேண்டும் என்று சொல்வது நீங்கள் நடத்திவரும் ஆட்சியின் அவலங்களில் வெளிப்பாடாகவே தெரிகிறது. அதுமட்டுமல்ல, உங்கள் கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்கான தனிப்பட்ட தமிழக காவல்துறையின் பாதுகாப்பை நம்பாமல் மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பை கேட்ட வரலாறுகளும் உண்டு.

தற்போது என்ன மாறிவிட்டது என்று நினைக்கிறீர்கள்? யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசமான வார்த்தைகள். உங்கள் கட்சித் தொண்டர்களை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்? இதுபோன்று பேசுவது தனிச்சிறப்பு வாய்ந்த பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட நமது மாநிலத்துக்கு உகந்தது கிடையாது. நீங்கள் 8.50 கோடி மக்களுக்கான முதல்வரா அல்லது உங்கள் குடும்பத்துக்கும் உங்களைச் சுற்றியுள்ள குறுகிய வட்டத்துக்குமான முதல்வரா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரும்போது நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? எதற்காக இப்படிப் பதறி பாய்கிறீர்கள் முதல்வரே” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it