சிலந்தி சிங்கங்களை என்ன செய்துவிட முடியும்? முரசொலிக்கு கவர்னர் தமிழிசை சவுக்கடி பதில்!

சிலந்தி சிங்கங்களை என்ன செய்துவிட முடியும்? முரசொலிக்கு கவர்னர் தமிழிசை சவுக்கடி பதில்!

Share it if you like it

எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்? என்று முரசொலி நாளிதழுக்கு தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் ஏழாம் பொறுத்தமாக இருந்து வருகிறது. தி.மு.க.வினரும், அதன் கூட்டணிக் கட்சியினரும் நாத்திகம் பேச, பதிலுக்கு கவர்னர் ரவி ஆத்திகம் பேசி வருகிறார். குறிப்பாக, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் சனாதன தர்மம் பற்றி பேசிவருகிறார் கவர்னர். இதனால், தி.மு.க.வினரும், கூட்டணிக் கட்சியினரும் கவர்னர் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். எனவே, கவர்னரை திரும்பப் பெறக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப் போவதாகக் கூறிவருகின்றனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவர்னர் அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. என் வழி தனி வழி என்பது போல தான் நினைத்ததை செய்தும், பேசியும் வருகிறார். அதேபோல, தெலங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்திரராஜனுக்கும், அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் எதிரும் புதிருமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில்தான், கவர்னர்களை எச்சரிக்கும் வகையில், தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் ‘ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள்’ என்று சிலந்தி என்பவரது பெயரில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதற்குத்தான் மிகவும் காட்டமாக பதிலளித்திருக்கிறார் தெலங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. சிலந்தி வேடமிட்டு வரும் மூட்டை பூச்சிகளே, உங்கள் சாயம் வெளுக்கிறது என்கிற பயமா? எனவேதான் எதைக் கண்டாலும் அஞ்சும் தெனாலி திரைப்படக் கதாநாயகன் போல் நிழலுக்கும் அஞ்சி அஞ்சி அடிக்கடி ஆளுநரை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறீர்கள். சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா? உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை, கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம்). எனவே, அந்த பயத்தில் குளிர் ஜூரம் வந்து அடிக்கடி என்னைப் பற்றி கட்டுரை வருகிறது.

தெலங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு, தெலங்கானாவின் ஆளுநராக இருந்தாலும், தெலங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. என்னை யார் தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது. யார் அந்நியர் நீங்களா? நானா? கடந்த 3 ஆண்டுகள் தெலங்கானா உள்ளூர் பத்திரிகைச் செய்திகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் யார் நடுங்கிப் போயிருக்கிறார்கள் என்பது தெரியும். அங்கே தெலங்கானா அரசை அலறவிடுவது யார் என்பதும் தெரியும். எனக்கு பதில் சொல்ல ஆட்சியாளர்களும், குடும்ப வாரிசுகளும், அமைச்சர்களும் கங்கனம் கட்டி நிற்பதே அதற்கு சாட்சி. அங்கே மக்களுக்காக ஆட்சியாளர்களை திணறடிக்கும் என்னை கை பிசைந்து நிற்பதாக கனவு காண்கின்றீர்கள்.

ஆளுநருக்குரிய மரியாதையை தர தவறியதில் விளைவுகளை கண்டுதான் உங்களுக்கு பரமானந்தம் என்றால் அது மாதிரியான அற்ப சந்தோஷம்தான் உங்களுக்கு கிட்டும். இதன் மூலம் உலகத் தமிழர்களுக்கு காப்புரிமை வாங்கிக் கொண்டதாக தம்பட்டம் கட்டிய, வீர வசனம் பேசிய உங்கள் சாயம் வெளுக்கிறது. அங்கே பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம். தெலங்கானாவில் 3 நாள், பாண்டிச்சேரியில் 3 நாள் என்று நேரம் ஒதுக்கி, வழியில் தமிழ்நாட்டிலும் சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு பணியாற்றும் என்னை குறை காண வேண்டாம். நான் பொதுவெளியில் வைக்கும் வாதங்களுக்கு பதில் விளக்கம் சொல்ல தெம்பும் திராணியும் அற்றவர்கள்தான் என்னைப் பற்றி கட்டுரை எழுதுகிறார்கள். 

தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி அண்டை மாநிலத்தில் மக்கள் பணியாற்றும் நான் கருத்து கூறினால், அதை எதிர்த்து கட்டுரை எழுதுவதுதான் உங்கள் கருத்து சுதந்திரமா? நீங்கள் எரிமலைகள் என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி. எரிமலைகள் இமயங்களை ஒன்றும் செய்ய முடியாது. குருவி தலையில் பனம் பழமா என்று கேட்டிருக்கிறீர்கள்? இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசு குருவிகள் நாங்கள் அல்ல. பனை விதைகளாய் மண்ணில் புதைந்து தானே வளர்ந்து உருக்கேறிய பனை மரங்கள் நாங்கள். முரசொலியின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம். இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாத போது. முரசொலி எங்களை என்ன செய்துவிட முடியும். வதந்திகளை பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம். உண்மையாக உழைக்கும் சிங்கங்களை ஒன்றும் செய்து விட முடியாது. சிலந்திகள் சிங்கங்களை என்ன செய்து விட முடியும்” என்று வாங்கு வாங்கு என்று வாங்கி இருக்கிறார்.


Share it if you like it