‘தொப்பியை கழற்றி விடுவேன்’… பெண் இன்ஸ்பெக்டருக்கு தி.மு.க. நிர்வாகி மிரட்டல்!

‘தொப்பியை கழற்றி விடுவேன்’… பெண் இன்ஸ்பெக்டருக்கு தி.மு.க. நிர்வாகி மிரட்டல்!

Share it if you like it

பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரை, தொப்பியை கழற்றி விடுவேன் என்று தி.மு.க. நிர்வாகி ஒருவர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி தி.மு.க. செயலாளராக இருப்பவர் மீசை துரைசாமி. இவர்தான், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று பெண் இன்ஸ்பெக்டர் செல்லம் என்பவரை தொப்பியை கழற்றி விடுவதாக மிரட்டி இருக்கிறார். அதாவது, 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 16 வயது சிறுவர்கள் இருவரை பிடித்து விசாரித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் செல்லம். இதுகுறி்த்து அச்சிறுவர்களின் பெற்றோர் மீசை துரைசாமியிடம் சொல்லி, தங்களது மகன்களை காப்பாற்றுமாறு கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, காவல் நிலையத்துக்கு வந்த மீசை துரைசாமி, இன்ஸ்பெக்டர் செல்லத்திடம் சிறுவர்களை விடுவிக்குமாறு கூறியிருக்கிறார். ஆனால், இன்ஸ்பெக்டர் மறுத்துவிடவே, இருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் மீசை துரைசாமி, “நான் யாரென்று தெரியுமா… தொப்பியைக் கழற்றி விடுவேன் ஜாக்கிரதை” என்று மிரட்டுகிறார். இது தொடர்பான வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்த பலரும் போலீஸ் இன்ஸ்பெக்டரையே மிரட்டும் அளவுக்கு தி.மு.க.வினரின் அராஜகம் எல்லைமீறி சென்று கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it