சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது – சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் !

சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக்கூடாது – சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் !

Share it if you like it

சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு இருமுடியேந்தி பக்தியோடு வருகின்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு எடுக்க கூடாது என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் வட தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் குருஸ்வாமியும் வடதமிழகம் பொது செயலாளர் ஈரோடு ஜெயராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-

இரண்டு நாட்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, வருகின்ற மண்டல காலத்தில் இருந்து சபரிமலைக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு நாளைக்கு 80000 பேர்கள் மட்டுமே முன் கூட்டி பதிவு செய்யும் முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தனர். இது சபரிமலை அய்யப்ப பக்தர்களை பொறுத்த மட்டில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவு. வெர்ச்சுவல் கியூ மூலம் முன்கூட்டி வருகையை பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்றவர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாது என்று உத்தரவு போடுவதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தான் தேவஸ்வம் போர்டின் தலையான பணி. அதை தான் அவர்கள் செவ்வனே செய்ய வேண்டும்.

குருவாயூர், திருப்பதி, பழனி, வைஷ்ணவிதேவி போன்ற கோவில்களிலிருந்து பல்வேறு வகையில் சபரிமலை வேறுபட்டு விளங்குகின்றது. ஆகவே அங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த கையாளும் முறைகளை அதே படி சபரிமலையில் நடைமுறைப்படுத்துவது சிரமமானது அதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தும் மனப்பான்மையை கைவிட்டு விட்டு, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முனைப்பு காட்ட வேண்டும் என்று சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் கேட்டுக் கொள்கிறது. எருமேலி, நிலக்கல், பம்பா
போன்ற பகுதியில் உடனடி தரிசன அனுமதி (ஸ்பாட் புக்கிங்) நிறுத்தி விடுவோம் என்பது அய்யப்ப பக்தர்களுக்கு விடப்பட்டசவாலாக உன்ளது. இதை அய்யப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து முறியடிப்போம்.

இதற்கு முந்தைய காலங்களில் இதை விட அதிகமான கூட்டங்கள் எந்த விதமான முன்பதிவும் இல்லாமல் சபரிமலைக்கு வந்தபோதெல்லாம், அனுபவமும் பக்குவமும் நிறைந்த காவல்துறை அதிகாரிகளால், பக்தர்களுக்கு எவ்வித சிரமமுமின்றி மிக அழகாக கையாளப்பட்ட வரலாறு உள்ளது.

தேவஸ்வம் போர்டும் காவல் துறையினரும் மற்ற அதிகாரிகளும் சேர்ந்து, சன்னிதானத்தில் கூட்டத்தை குறைப்பதாக கூறி, கடந்த ஆண்டு எடுத்த தவறான முடிவும், அதன் நடவடிக்கையும் மூலம் பக்தர்கள் 16 முதல் 20 மணிநேரங்கள் வரை கூட்ட நெரிசலில் அவதிப்பட்டதையும், எண்ணற்ற பக்தர்கள் சன்னிதானம் சென்று தரிசனம் செய்வதை கூட தவிர்த்து, கியூவிலிருந்து வெளியேறி, பந்தளம், எருமேலி போன்ற கோவில்களுக்கு சென்று, அங்கு தங்கள் விரதத்தை நிறைவு செய்து ஊருக்கு திரும்பி சென்றதையும் இத்தகுணத்தில் நினைவுபடுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

பக்தர்களை கட்டுப்படுத்தும் போக்கினை கைவிட்டு, வர கூடிய கூட்டத்தை எப்படி சமாளிக்கலாம் என்பது குறித்து தேவஸ்வம் போர்டும், கேரளா அரசும் யோசிக்க வேண்டும். ஒன்று ஒன்னரை லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் வகையில் 500 பேர்கள் அமர கூடிய காத்திருப்பு கூடங்கள் (ஷெல்டர்) சன்னிதானத்தை சுற்றி உடனடியாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு கூடங்களிலும் தேவையான கழிவறைகள், மின்விசிறிகள், குடிநீர் மற்றும் சன்னிதான நிகழ்வுகள் ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சி பெட்டிகள் வைக்க வேண்டும். பம்பயிலிருந்து நீலிமலை ஏறி இந்த காத்திருப்பு கூடங்கள் வரை பக்தர்களுக்கு எந்த தடையும் இருக்க கூடாது. பம்பையிலோ மலையேற்றத்திலோ அய்யப்ப பக்தர்களை மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தி அவதிக்குள்ளாக்கும் நிலைமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.

அதை போன்று பாதயாத்திரையாக சொந்த ஊர்களிலிருந்தும், பெருவழி பாதை வழியாகவும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கரிமலை உச்சியில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கி அவர்களை நேரடியாக பதினெட்டாம்படி ஏறி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஆக்க பூர்வமான பணிகளை சபரிமலையில் நடைமுறைப்படுத்தினால், ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பக்தர்கள் கூட தரிசனம் செய்ய முடியும்.பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முடிவிலிருந்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பின்வாங்க வேண்டும். இல்லையென்றால் அய்யப்ப பக்தர்களை திரட்டி அறநெறி வழியிலான போராட்டங்களில் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ஈடுபடும் என்பதையும் இந்த அறிக்கை மூலமாக தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *