இரட்டை இலைக்கு ஓட்டுக்கேட்ட இளங்கோவன்: கமல் ஷாக்!

இரட்டை இலைக்கு ஓட்டுக்கேட்ட இளங்கோவன்: கமல் ஷாக்!

Share it if you like it

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்ட சம்பவம் வேடிக்கைக்கு உள்ளானது. இதைப் பார்த்து நடிகர் கமல்ஹாசன் ஷாக்காகி விட்டார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., சமீபத்தில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரழந்தார். இதையடுத்து, அத்தொகுதிக்கு எதிர்வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு போட்டியிடுகிறார். இது ஆளும்கட்சிக்கு கவுரவப் பிரச்னை என்பதாலும், அ.தி.மு.க.வுக்கு வாழ்வா, சாவா பிரச்னை என்பதாலும், பிரசாரம் களைகட்டி இருக்கிறது.

தி.மு.க.வில் அக்கட்சியைச் சேர்ந்த ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தனர். இந்த சூழலில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், திடீரென தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இளங்கோவனுக்கு ஆதரவாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின்போதுதான், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டிருக்கிறார் இளங்கோவன்.

அதாவது, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனும், நடிகர் கமலஹாசனும் ஈரோடு கிழக்குத் தொகுதி முழுவதும் வேனில் பிரசாரம் செய்தபடி சென்றனர். அப்போதுதான் தன்னையும் அறியாமல் இரண்டு விரலை காட்டி, ஆட்டி ஆட்டி இரட்டை இலைக்கு வாக்குக் கேட்டார் இளங்கோவன். இதைப் பார்த்த தொண்டர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் கை சின்னத்தைக் காட்டுமாறு கூச்சலிடவே, சுதாரித்துக் கொண்ட இளங்கோவன், தனது தவறை உணர்ந்து கை சின்னத்தைக் காட்டி வாக்கு சேகரித்தார். இது கமலுக்கு கடும் அதிர்ச்சியாகி விட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இளங்கோவனின் செயலை கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it