தடை கோரிய மனு தள்ளுபடி… ராகுல் காந்திக்கு சிறை தண்டனை உறுதி?!

தடை கோரிய மனு தள்ளுபடி… ராகுல் காந்திக்கு சிறை தண்டனை உறுதி?!

Share it if you like it

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், ராகுல் காந்தி 2 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அது எப்படி மோசடி நபர்கள் அனைவரும் மோடி என்ற பெயரை தங்கள் பின்னால் வைத்திருக்கின்றனர்” என்று விமர்சித்தார். இதன் மூலம், லலித் மோடி, நீரவ் மோடி மட்டுமல்லாது பிரதமர் மோடியையும் மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, குஜராத் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து, மறுநாளே எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், தீர்ப்பை எதிர்த்து சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், ராகுலுக்கு ஜாமீன் மட்டுமே வழங்கிய நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

இந்த நிலையில், மேற்படி அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தண்டனையை நிறுத்தி வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்று குஜராத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மேலும், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த சூரத் நீதிமன்ற உத்தரவு சட்டப்படி நியாயமானதே எனவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், உச்ச நீதிமன்றத்தை ராகுல் காந்தி அணுகுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனிடையே, ராகுல் காந்தி வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கட்சி உச்ச நீதிமன்றத்தை அணுகும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it