கதர் புரட்சிக்கு தன்னை அர்ப்பணித்த  “காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன்

கதர் புரட்சிக்கு தன்னை அர்ப்பணித்த “காந்தி ஆஸ்ரமம்” அ.கிருஷ்ணன்

Share it if you like it

காந்தி ஆஸ்ரமம் திரு அ.கிருஷ்ணன் அவர்கள், திருநெல்வேலி நகரத்தில், செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி,1908 ஆம் ஆண்டு பிறந்தார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய கல்வி, திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு வரை நடந்தது. இளம் வயதில், தேசிய உணர்வு ஏற்பட்ட காரணத்தால், அப்போது நடந்த பல தேசிய இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்.

குடும்ப  சூழ்நிலை காரணமாக,  பம்பாய்  நகரில்  இருந்த  உறவினரிடம், வேலைக்காக  அனுப்பப் பட்டார். அங்கு 1927 –  1929  ஆண்டுகளில்,  ஒரு தனியார்  நிறுவனத்தில்  பணியாற்றினார். பம்பாய் பெருநகரம்  என்பதோடு, தேசிய  இயக்கத்தில்  ஈடுபடவும்,  அங்கு வாய்ப்பு ஏற்பட்டது.

கதர் துணிகளை மொத்தமாக வாங்கி, தோளில் சுமந்து கொண்டு, விற்பனை செய்து, தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். இந்தப்  பணிக்காக, மகாத்மா காந்தியிடம்  பெற்ற பாராட்டை, பெருமையாகக் கருதினார்.

பம்பாயிலிருந்து  தமிழகம்  திரும்பி,  விளாத்திக்குளம் எனும் ஊரில், பொதுப் பணித்துறையில் மேஸ்திரியாகப் பணியாற்றத்  தொடங்கினார். அங்கு இருந்த கதர் கடைக்கு  கிருஷ்ணன் அவர்கள்,  அடிக்கடி  செல்வது  வழக்கம்.

அப்படி  அங்கு  சென்ற  போது,  கதர் கடையில் இருந்த ஒரு பத்திரிகை, இவர் கண்களில்  பட்டது. அது “விமோசனம்” எனும் பத்திரிகை. அது திருச்செங்கோடு நகரத்தில், இராஜாஜியால் தொடங்கப்பட்ட ‘காந்தி ஆசிரமத்தின்’ வெளியீடு. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர், கல்கி ரா. கிருஷ்ண மூர்த்தி. உடனே அந்த பத்திரிகைக்கு சந்தா அனுப்பியதோடு, கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை ஏற்று அலுவலகத் தொடர்பினாலும், பொதுத் தொடர்பினாலும் பலரிடம் சந்தா வசூலித்து ‘விமோசனம்’ பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார்.

இவரது ஆர்வத்தையும், தேசபக்தியையும் கல்கி வெகுவாகப் பாராட்டி, இவரை திருச்செங்கோடு வந்து தன்னைச் சந்திக்குமாறு, கடிதம் எழுதினார். கல்கியின் வேண்டுகோளை ஏற்று, கிருஷ்ணன் 1930 இல் திருச்செங்கோடு சென்று, அங்கு கல்கியைத் தேடினார். இவர் போன போது, கல்கி அங்கு இல்லை. பிறகு அவர் வந்த பின், தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ஆசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு இராஜாஜி, வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காக, திருச்சியிலிருந்து டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து, நூறு தொண்டர்களுடன் பாத யாத்திரை சென்றார். இவருக்கும், அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ள, ஆசை தான். ஆனால், இவரை அப்போது வர வேண்டாம் என் று சொல்லி விட்டார்கள்.

அது முதல் ராஜாஜி, கிருஷ்ணனின் ஆதர்ஷ  தலைவர் ஆனார். சுதந்திரப் போரில்  நடைபெற்ற  பல போராட்டங்களில் இவர் பங்கு பெற்றார்.1932 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1933 வரை, சுமார் ஒரு வருட காலம் சிறை தண்டனை பெற்று, கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தார். அதன் பிறகு, 1933 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி, ராஜாஜி தலைமையில் போராட்டத்தில் கைதாகி, இரண்டாம் முறையாக சிறையில் இருந்தார்.

நாமக்கல்லில், இராமலிங்கம் பிள்ளையோடு போராட்டங்களில் கலந்து கொண்டு, கொல்லிமலைப்  பகுதிகளில், காவல் துறையின் கண்களில் படாமல் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தினார்.

அப்போது, இவரோடு இருந்த பல தேசபக்தர்களுக்கு இராமலிங்கம்  பிள்ளையின் சகோதரி மகன் இராமசாமி பிள்ளை (கரூர்), சைக்கிளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, பாத்திரங்கள் தெரியாமல் அதன் மீது வைக்கோலை வைத்துக் கொண்டு, ரகசியமாகக் கொண்டு செல்வாராம். காந்தியத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்டவர், இளமை முதல் கதர் மட்டுமே அணிந்து வந்தார்.

1930 தொடங்கி 1970 வரை, காந்தி ஆஸ்ரமப் பணியில், தன்னை ஈடுபடுத்திக்  கொண்டு, 1970 இல் பணி நிறைவு பெற்று, தன் பிள்ளைகள் பேராசிரியர்  கி.கண்ணன், திரு கி.முத்து ராமகிருஷ்ணன் ஆகியோரோடு வசித்து வரலானார்.

திருச்செங்கோடு ஆசிரிமத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அதோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆசிரமத்தில், இவர் நிர்வாகம் செய்த காலத்தில், கதர் பணியில் ஈடுபாட்டோடு சிறப்பாகப் பணியாற்றினார். கதர் இயக்கத்தில் அப்போது தீவிரமாக இருந்த கோவை ஐயாமுத்து போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு இருந்தது. ஆசிரமத்தில் இராட்டையில் நூல் நூற்கவும், கதர் துணி தயாரிக்கவும், அதிக ஈடுபாடு காட்டினார்.

1940 இல், நாகபுரிக்கு அருகில் இருந்த, வார்தா காந்தி ஆசிரமம் சென்று, அங்கு “மகன்வாடி கிராமோத்யோக் வித்யாலயா”வில், கையினால் காகிதம் செய்யும் முறையைக் கற்று வந்தார்.  திருச்செங்கோடு திரும்பி, இருந்த தொண்டர்கள்  பலருக்கும்,, கையினால் காகிதம் செய்யும் முறையைப் பயிற்றுவித்து, எல்லோருக்கும் பயன்படும்படி கைத் தொழிலை வளர்த்தார்.

அப்போது, திருச்செங்கோடு ஆசிரமத்தின் “காதி பண்டார்” எனும் கதர் கடையின் நிர்வாகியாக, பழனிச்சாமி பண்டாரம் என்பவர் இருந்தார். அவர், 1945 இல் காலமான போது, கிருஷ்ணன் அந்த பண்டாரின் நிர்வாகியாக நியமிக்கப் பட்டார். அது முதல், சுமார் இருபத்தைந்தாண்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார். சேலத்தில் இப்போது உள்ள ‘இராஜாஜி காதி பவன்’, அன்று ஆசிரமத்தில் இருந்த காதி பண்டார் தான்.

தியாகி அ.கிருஷ்ணனுக்கு மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் அதிக ஈடுபாடும், பக்தியும்உண்டு. தன் மகன் ஒருவருக்கு, இராமகிருஷ்ணன் என பெயரிட்டதே, இந்தக் காரணம் தொட்டே.

அன்றைய சேலம் மாவட்டத்தில், பல இடங்களுக்கும் பயணம் செய்து, மேற்கண்ட மகான்களைப் பற்றிய பெருமைகளைப் பரப்பியதோடு, பல விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் பாடல்களை நல்ல இசை வளம், நல்ல குரல் வளத்தோடு, பாடுவார்.

இவரது மூத்த மகனை, 1977 ஆம் ஆண்டில் பறிகொடுத்தார். புத்திர சோகம் இவர் மனதை ஆழமாகப்  பாதித்திருந்தாலும், அதனை  சிறிது கூட  வெளிக்காட்டிக் கொள்ளாமல், கீதையின் வழிகாட்டுதல்படி நன்மை  தீமைகளைச் சமமாகப் பாவித்துத், தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். மூத்த மகனை இழந்த பின், எட்டு ஆண்டுகள்  வாழ்ந்து, 1985 இல் மறைந்தார்.


Share it if you like it