‘நீங்கள்தான் எங்கள் இலக்கு’: பண்டிட்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்!

‘நீங்கள்தான் எங்கள் இலக்கு’: பண்டிட்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்!

Share it if you like it

நீங்கள்தான் எங்கள் இலக்கு என்று காஷ்மீர் பண்டிட்களுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் வசித்து வந்த ஹிந்து பண்டிட்கள் மற்றும் சிறுபான்மையினர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடும் சித்ரவதைகளை அனுபவித்தார்கள். குறிப்பாக, 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஹிந்துப் பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது கொடுமையிலும் கொடுமையான சம்பவம். இதனால், உயிருக்கு பயந்து தங்களது ஆஸ்தி, அந்தஸ்து எல்லாவற்றையும் அங்கேயே விட்டு விட்டு, அகதிகளாக வெளியேறினார்கள் காஷ்மீர் பண்டிட்கள். இவர்கள் அனைவரும் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால், அப்போது சமூக வலைத்தளங்களும் மீடியாக்களும் பெரிய அளவில் இல்லாத நிலையில், இந்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரியவில்லை. இந்த சூழலில், கடந்த மார்ச் மாதம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்கிற படம் வெளியாகி, காஷ்மீர் இனப்படுகொலையை அம்பலப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, 2019-ம் ஆண்டு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததோடு, அங்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி, பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதன் பயனாக, ஏராளமான பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதோடு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் வசித்த காஷ்மீரி பண்டிட்கள், மீண்டும் தங்களது சொந்த ஊரான காஷ்மீருக்கே சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், ஹிந்து பண்டிட்களை காஷ்மீரில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், காஷ்மீரில் வசிக்கும் ஹிந்து பண்டிட்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம், காஷ்மீரின் சதூரா பகுதியிலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் புலம் பெயர் காஷ்மீரி பண்டிட்களுக்கான சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராகுல் பட் என்கிற காஷ்மீரி பண்டிட்டை காஷ்மீர் டைகர்ஸ் என்கிற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, தற்போது காஷ்மீரி பண்டிட்களுக்கு பயங்கரவாதிளிடமிருந்து கொலை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹவால் ட்ரான்சிட் விடுதியில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்திருக்கிறது.

இதுதொடர்பாக ஹவால் ட்ரான்சிட் காலணியின் தலைவருக்கு லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பு அனுப்பிய கடிதத்தில், “ஆர்.எஸ்.எஸ். முகவர்கள் மற்றும் காஷ்மீருக்கு புலம்பெயர்ந்தோர் இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ளுங்கள். காஷ்மீரில் மற்றுமொரு இஸ்ரேல் வேண்டும் என்று முஸ்லிம்களைக் கொல்ல விரும்பும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு காஷ்மீரில் இடமில்லை. உங்கள் பாதுகாப்பை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரித்துக் கொள்ளவும். நீங்கள்தான் எங்கள் இலக்கு. எனவே, நீங்கள் இறக்கப் போகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் காஷ்மீர் பண்டிட்களை பெரும் சோகத்திலும், கவலையிலும் ஆழ்த்தி இருக்கிறது.


Share it if you like it