பா.ஜ.க. பிரமுகர் மீது தாக்குதல்!

பா.ஜ.க. பிரமுகர் மீது தாக்குதல்!

Share it if you like it

பா.ஜ.க. பிரமுகர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பனங்கால்முக்கைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (39). பா.ஜ.க. பிரமுகர். இவரது மனைவி ரேணுகா (32). இருவரும் எறும்புகாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்காக நேற்று காலை புதுக்கடையில் இருந்து திங்கள்நகர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். இரணியல் அருகே மேக்கோடு என்ற இடத்தில் வந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கியது. இதில், ராதாகிருஷ்ணனின் கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதேபோல, அவரது மனைவி ரேணுகா மீதும் அக்கும்பல் தாக்குதல் நடத்தியதோ, இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது. இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவரவே, 4 பேரும்  தப்பிச்சென்று விட்டனர். படுகாயமடைந்த ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி ரேணுகா, இரணியல் போலீஸில் புகார் செய்தார். அப்புகாரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரருக்கும், தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பிரிவினருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அந்த முன்விரோதம் காரணமாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் தாக்கியதாகவும் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் இரணியல் போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் புதுக்கடை பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Share it if you like it