கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு !

கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைப்பு !

Share it if you like it

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இவருடைய மனைவி செல்வி என்பவர், சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

செல்வி, சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் 12ம் வகுப்பு படித்து முடித்த தன் மகள் ரேகாவை, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

ரேகா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது. கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட ரேகாவை, தனது குழந்தை அழும்போதெல்லாம், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ரேகாவை சிகரெட் கொண்டு ஆண்டோ மதிவாணன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் எம்.எல்.ஏவின் மருமகள், ரேகாவின் தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்டு வந்ததையடுத்து, தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ரேகா. இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேகாவை வீட்டிற்கு வருமாறு அவரது தாய் அழைத்துள்ளார். அப்போது, “நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்று ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரேகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரேகாவை காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share it if you like it