மாஜி அமைச்சர் கார் மீது தாக்குதல், ஆசிட் வீச்சு: வேட்பாளர் கடத்தல்… தி.மு.க.வினர் கைவரிசையா?!

மாஜி அமைச்சர் கார் மீது தாக்குதல், ஆசிட் வீச்சு: வேட்பாளர் கடத்தல்… தி.மு.க.வினர் கைவரிசையா?!

Share it if you like it

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதோடு, ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், இன்று மதியம் தனது ஆதரவாளர்கள் சிலருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். வேடச்சந்தூர் அருகே நாகம்பட்டி பாலம் பகுதியில் வந்தபோது, 4 கார்கள் விஜயபாஸ்கர் காரை முந்திச் சென்றது. அக்கார்களில் இருந்த மர்ம நபர்கள், திடீரென விஜயபாஸ்கர் காரை மறித்து தாக்குதல் நடத்தினர். மேலும், காரின் முன்புற, பின்புறக் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அதோடு, காரில் இருந்த நபர்கள் மீதும் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர். இதில், காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருடன் வந்த ஒருவரை, மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இந்த கடத்தலுக்காவே விஜயபாஸ்கர் கார் மீதான தாக்குதலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

அதாவது, கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல், இன்று கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 மாவட்ட கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் தலா 6 பேர் வீதம் இருக்கிறார்கள். இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திருவிக என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருடன் திண்டுக்கல்லில் இருந்து கரூருக்கு வந்திருக்கிறார். ஆகவே, இவரை குறிவைத்தே விஜயபாஸ்கர் கார் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தகவலறிந்த கரூர் மாவட்ட போலீஸார், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மேலும், திண்டுக்கல் – கரூர் சாலையிலுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it