பஸ்ஸில் சில்மிஷம்: சிங்கிளாக சிதைத்த சிங்கப்பெண்!

பஸ்ஸில் சில்மிஷம்: சிங்கிளாக சிதைத்த சிங்கப்பெண்!

Share it if you like it

பஸ்ஸில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை, ஒரு சிங்கப்பெண் சிங்கிளாக சின்னாபின்னமாக்கிய சம்பவம் கேரளாவில் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சந்தியா. சுமார் 30 வயது இருக்கும் இவர், இன்று காலை வயநாட்டில் உள்ள படிஞ்ஞாறுதுறை பகுதியிலிருந்து வேங்கப்பள்ளி என்கிற ஊருக்கு செல்வதற்காக தனியார் பேருந்தில் ஏறி இருக்கிறார். வேறு எங்கும் இருக்கை இல்லாததால், சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் அமர்ந்திருந்த சீட்டின் அருகில் காலியாக இருந்த இருக்கையில் போய் அமர்ந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த ஆசாமி, சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் சந்தியா ஆத்திரமடைந்தாலும் சற்றே அமைதி காத்திருக்கிறார். ஆனால், பஸ் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த நிலையில், மேற்படி ஆசாமியின் சில்மிஷம் எல்லை மீறிப் போயிருக்கிறது. இதனால் வெகுண்டெழுந்த சந்தியா, விஷயத்தை கண்டக்டரிடம் சொல்லி இருக்கிறார். உடனடியாக பேருந்தை நிறுத்தச் செய்த கண்டக்டர், மேற்படி ஆசாமியை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி விட்டார். கீழே இறங்கிய அந்த நபரோ, சந்தியாவை பார்த்து ஆபாசமாக சைகை காட்டி இருக்கிறார்.

இதையடுத்து, பஸ்ஸை விட்டு கீழே இறங்கிய சந்தியா, சிங்கிள் ஆளாக மேற்படி ஆசாமியை புரட்டி எடுத்து விட்டார். அடிக்க வந்த சந்தியாவை தடுக்க முயன்ற ஆசாமியை கீழே தள்ளி விட்டு, எட்டி விட்டார் இரண்டு உதைகள். அவ்வளவுதான் ஆடிப்போய் விட்டான் மேற்படி ஆசாமி. கீழே படுத்து புரண்டபடியே கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தான். இவ்வளவு சம்பவம் நடந்த போதும், பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகளோ, பஸ் ஸ்டாண்டில் தங்களது பஸ்ஸுக்காக காத்திருந்த பயணிகளோ வேடிக்கை மட்டுமே பார்த்தார்களே தவிர, சந்தியாவுக்கு உதவிக்கு வரவில்லை என்பதுதான் சோகம். எனினும், சந்தியா தனி ஆளாக அந்த ஆசாமிக்கு பாடம் புகட்டி, தான் ஒரு சிங்கப்பெண் என்பதை நிரூபித்து விட்டார்.


Share it if you like it