தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி: குஷ்புவுக்கு குவியும் வாழ்த்து!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி: குஷ்புவுக்கு குவியும் வாழ்த்து!

Share it if you like it

பிரபல நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் குஷ்புவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

1989-ம் ஆண்டு வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, 90’s மற்றும் 2000 காலகட்டத்தில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. பின்னர், இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி.யை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது, பா.ஜ.க.வில் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் குஷ்பு. இந்த சூழலில்தான், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்புவை நியமித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் குஷ்புவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க. சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் உரிமைக்காக அவரின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது” என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்திருக்கும் குஷ்பு, “தங்களின் ஆதரவும், மதிப்பும் எனக்கு என்றும் ஊக்கமாக இருந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

இதேபோல, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக திருமதி. குஷ்பு சுந்தர் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகவும், பெண் உரிமைக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சகோதரி குஷ்பூ அவர்களின் பணிகள் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பு அவர்களுக்கு வாழ்த்துகள்! எதையும் நேர்த்தியாகத் திறம்படச் செய்வீர்கள் என்பதை அறிவேன். அதைப் போலவே இப்பணியையும் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

தவிர, பா.ஜ.க. தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் உட்பட பல்வேறு தரப்பினரும் குஷ்புவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it