கல்லூரி மாணவரின் பல் உடைப்பு: தி.மு.க. நிர்வாகி கைது!

கல்லூரி மாணவரின் பல் உடைப்பு: தி.மு.க. நிர்வாகி கைது!

Share it if you like it

மதுரையில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், கல்லூரி மாணவனின் பற்களை உடைத்த தி.மு.க. இளைஞரணி நிர்வாகி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். சென்னையிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் விஷூவல் கம்யூனிகேஷன் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக மதுரைக்குச் சென்றிருந்தவர், கடந்த 2 மாதங்களாக வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு மது அருந்துவதற்காக நண்பர்களுடன் மதுரை பி.பீ.குளத்திலுள்ள மதுக்கடை பாருக்குச் சென்றார். அந்த பார் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருக்கும் பிரேம்குமாருக்குச் சொந்தமானது.

இந்த சூழலில், பாருக்குச் சென்ற பிரவீன்குமார், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க முயன்றிருக்கிறார். இதைக் கண்ட பார் உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் ஊழியர்கள் சேகர், சோணைமுத்து ஆகியோர் பிரவீன்குமாரை ஆபாசமாகப் பேசியிருக்கிறார்கள். இதில், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்படவே, பிரேம்குமார் உள்ளிட்டோர் பிரவீன்குமாரை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். மேலும், பிரவீன்குமார் முகத்தில் பிரேம்குமார் விட்ட குத்தில் அவரது 3 பற்கள் உடைந்து கீழே விழுந்தன.

அதோடு, பீர்பாட்டிலை தூக்கி ‘இங்கிருந்து போயிரு இல்லாட்டி பாட்டிலால் அடித்தே கொன்று விடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள். இதையடுத்து, பிரவீன்குமாரை அவரது நண்பர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில், தி.மு.க. இளைஞரணி நிர்வாகி பிரேம்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it