மகனாக கருதி பிரதமர் மோடிக்கு 6 ஏக்கர் நிலம்: 100 வயது ம.பி. மூதாட்டி விருப்பம்!

மகனாக கருதி பிரதமர் மோடிக்கு 6 ஏக்கர் நிலம்: 100 வயது ம.பி. மூதாட்டி விருப்பம்!

Share it if you like it

தனது மகனாகக் கருதி, தனக்குச் சொந்தமான 24 பிகா (6.6 ஏக்கர்) நிலத்தை, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு மாற்றித் தரப்போவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டி அறிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மங்கிபாய் தன்வார். 100 வயது மூதாட்டியான இவருக்கு, 12 மகன்கள், 2 மகள்கள் என 14 பிள்ளைகள் உள்ளனர். எனினும், தனது பிள்ளைகளை விட பிரதமர் மோடி மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார் மங்கிபாய். இதன் வெளிப்பாடாக தனது அறையில் பிரதமர் மோடியின் படத்தையும் மாட்டி வைத்திருக்கிறார். இந்த சூழலில், நேற்று ம.பி. சென்றிருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் போபாலிலுள்ள ராணி கமலபதி ரயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில்தான், மூதாட்டி மங்கிபாய் தன்வார், தனது 24 பிகா நிலத்தை பிரதமர் மோடியின் பெயருக்கு மாற்றி எழுதப்போவதாக அறிவித்து மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதுகுறித்து மூதாட்டி மங்கிபாய் தன்வார் கூறுகையில், “பிரதமர் மோடியை எனது மகனாகவே நான் கருதுகிறேன். தினமும் காலையில் எழுந்ததும் அவரது படத்தை பார்ப்பேன். என்னைப் போன்ற கோடிக்கணக்கான விதவைப் பெண்களுக்கு அவர் ஓய்வூதியம் கொடுக்கிறார். விவசாயிகளுக்கு கோதுமை, அரிசி மற்றும் உணவு கொடுக்கிறார்.

பயிர்கள் சேதமடைந்தால் உரிய நிவாரணம் கொடுக்கிறார். எங்களுக்கு நல்ல வீடு கொடுத்திருக்கிறார். முதியவர்கள் புனித யாத்திரை செல்ல வழிவகை செய்திருக்கிறார். கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களை பிரதமர் மோடி காப்பாற்றினார். மேலும், நாட்டு மக்களை தனது குடும்பமாகவே கருதுகிறார். எனது குடும்பத்தையும் அவர் கவனித்துக் கொள்கிறார். ஆகவே, எனது பங்கான 24 பிகா நிலத்தை அவருக்கு வழங்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it