மருது பாண்டியர்களின் தலையை  நயவஞ்சகமாக கொய்த கிறிஸ்தவ வெள்ளையர்கள்

மருது பாண்டியர்களின் தலையை நயவஞ்சகமாக கொய்த கிறிஸ்தவ வெள்ளையர்கள்

Share it if you like it

மாமன்னர் மருது சகோதரர்கள்

(1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10 ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்று கொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள்)

மருது சகோதரர்களுடைய வீரமும், நாட்டை காலனியாக வைத்திருந்து ஆதிக்கம் செலுத்திய, வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களது போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக, ஒட்டுமொத்த தமிழகமும் நினைவு படுத்தி பார்க்க வேண்டிய நிகழ்வு. இன்று, உலகமயமாக்களின் காலத்தில், அந்நிய நாட்டு ஊடுருவல்கள் சமூக, பொருளாதார, ராணுவ, பண்பாட்டு ரீதியான, சந்தை ரீதியான உறவுகளில் உள்ளே நுழையும் சூழலில், கடந்த காலங்களில் தமிழன் அஞ்சாமல் அந்நியரை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை, நாம் நினைவுபடுத்தி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

1748 ஆம் ஆண்டில், டிசம்பர் 15 ஆம் தேதி உடையார் சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக, இன்றைய விருதுநகர் மாவட்டம், நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில், பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.

ராமநாதபுர அரசர் விசயரகுநாத சேதுபதி வேட்டைக்கு சென்று விட்டு, ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது, சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும், அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதி வாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து  அனுப்பினால், தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று, அரசர் முத்து வடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். ராமநாதபுர அரசர் விசயரகுநாத சேதுபதி மருது சகோதரர்களை அனுப்பி வைத்தார்கள். 1761 ஆம் ஆண்டில், அவர்களை முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்கையை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.

அரசி வேலு நாச்சியாருக்கு, போர் பயிற்சியை கற்றுக் கொடுத்தவர், சின்ன மருது என்றும் சொல்வார்கள். விஜயரகுநாத சேதுபதி மன்னர், சேது நாட்டை வென்றார். நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித், தஞ்சை மீது போர் தொடுத்தான். தஞ்சை மன்னர் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார்.

ஆங்கிலேய படையுடன் புதுக்கோட்டை தொண்டைமான் படை, உதவி செய்து ராமநாதபுரத்தை முற்றுகையிட்டது. அதன் பிறகு, சிவகங்கை சீமையை கைப்பற்ற, நவாப் சூழ்ச்சி செய்தார். முத்து வடுகநாதர், போரில் மரணமடைந்தார். வேலு நாச்சியாரை காப்பாற்ற, மருது சகோதரர்கள் படை திரட்டினார்கள்.1772 முதல் 1780 வரை தலைமறைவு வாழ்க்கை நடத்தி, மருது சகோதரர்கள் படை திரட்டினார்கள்.

ஆற்காடு நவாப்பிற்கும், ஆங்கிலேயர்களுக்கும் எதிராக படை திரட்டிய மருது சகோதரர்கள், கட்டபொம்மன் தலைமையில், இணைப்பை  ஏற்படுத்தினார்கள். ஊமைத் துரையும், சின்ன மருதுவும் நெருக்கமான நண்பர்களானார்கள். சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில், அடிப்படை மக்களுடன் இரண்டறக் கலந்து வாழத் தெரிந்த மருது சகோதரர்கள், சுதந்திரப் படையைத் திரட்டினார்கள்.

1772 க்குப் பிறகு, காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள், தமது கிளர்ச்சியை, 1779ல் தொடங்கி ஆற்காடு நவாப், தொண்டைமான் மற்றும் கும்பினியர்களின் படைகளை வெற்றி கொண்டு, 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு, வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

இந்தப் போரில், பெரிய மருது, மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். அரசியாரின் போர் வியூகத்தையும், வீரத்தையும் வெளிப்படுத்தியது.

வேலு நாச்சியார் ஆட்சியில், மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக அறிவித்தார். காளையார் கோவிலை சீரமைத்ததிலும், குன்றக்குடி முருகன் கோவில், ஆவுடையார் கோவில், செம்பொன் நாதர் கோவில், சிங்கம்புணரி சேவக பெருமாள் கோவில் ஆகியவற்றின் சீரமைப்புகளையும் மருது சகோதரர்கள் செய்தனர்.

குன்றக்குடியில், அரண்மனை கட்டினர். மருது பாண்டியர் அவையில் புலவர் குழு ஒன்றை அமைத்து, தமிழ்ச் சங்கம் மூலம், தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. ‘மயூரி கோவை’ என்ற கவிதை நூல், அரங்கேற்றப் பட்டது. பெரிய மருது பிறந்த நரிக்குடியில், அவர்கள் தாய் பொன்னாத்தாளுக்கு சத்திரம் கட்டப் பட்டது. மருது சகோதரர்கள், கலைகளை வளர்த்தனர். நாடகக் கலை வளர்ச்சி பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, தேர் வழங்கினார்கள்.

காளையார் கோவில் அருகே உள்ள சருகனியில், தேர் செய்து கொடுத்தார்கள்.1799 ஆம் ஆண்டு, கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப் பட்டார். அதற்குப் பிறகு, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைக்கு, சின்ன மருது அடைக்கலம் தந்தார். அதற்காகவே, 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுத்தனர்.

முதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி, 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்டனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக, ஒரு வரலாற்று செய்தி உண்டு. காளையார் கோவிலில், ஆங்கிலேயர்களுடைய படை மருது பாண்டியர்களுடைய படையை சுற்றி வளைத்ததாகவும், ஆனால் மருது சகோதரர்கள் தப்பிவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

விருப்பாச்சியில் ஆங்கிலேயர் படையுடன் மோதி, சகோதரர்கள் வென்றிருக்கிறார்கள் என்றும், சரித்திரம் இருக்கிறது. போர் வீரர்களாக மட்டுமில்லாமல், நிர்வாகத் திறமையையும் மருது சகோதரர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 1753லிருந்து 1801 வரை, மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்கள். பல்வேறு ஊரணிகளையும், குளங்களையும் கட்டி இருக்கிறார்கள். இன்றும் கூட, அவை ஆதாரமாக அங்கே இருக்கின்றன.

ஆனால், இன்றைய நிர்வாகத்தினர், அவற்றை சரியாகப் பராமரிக்காத காரணத்தினாலும், தூர்வாரி ஆழப்படுத்தாத காரணங்களினாலும், அவை நீரை தேக்கி நிறுத்தி, வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லாமல் ஆகிவிட்டன. மருது சகோதரர்கள் காலங்களில் சிவகங்கை வட்டாரம், பசுமையாக இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

மருது சகோதரர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சோழபுரத்தில் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு, 1801 ஆம் ஆண்டில், அக்டோபர் 24 ஆம் தேதி, தூக்கிலிடப் பட்டார்கள். அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய போர் களங்களை, மனலூர் போர், திருப்புவனம் போர், முத்தனேந்தல் போர், காளையார் கோவில் போர், சிவகங்கை போர், மங்களம் போர், மானாமதுரை போர், திருப்பத்தூர் போர், பார்த்திபனூர் போர், காரான்மலை போர் என்று பட்டியல் போட்டு கூறுகிறார்கள்.

அக்டோபர் 24ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள், அவர்களது விருப்பப்படி, காளையார் கோவில் கோபுரத்திற்கு எதிரே, அடக்கம் செய்யப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் நாள் மருது சகோதரர்களின் படம் கொண்ட அஞ்சல் தலை, இந்திய அரசால் வெளியிடப் பட்டது.

  • S.பாண்டியன்

Share it if you like it