சூடு, சொரணை, இருந்தால் வந்து பாருங்க: அமைச்சருக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சவால்!

சூடு, சொரணை, இருந்தால் வந்து பாருங்க: அமைச்சருக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் சவால்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சனம் செய்த அமைச்சருக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் பகீர் சவால் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நகர தி.மு.க.வின் சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

அமைச்சர் கீதா ஜீவனின் இந்த பொறுப்பற்ற பேச்சிற்கு தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;

தமிழகத்தின் அமைச்சர் கீதா ஜீவன் பொது கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியதோடு, “சூடு, சொரணை இருந்தால், என் தலைவர் குறித்தும், ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறுவோம்”

என்று மிரட்டல் விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிகார மமதையில் ஒரு அமைச்சர், அரசியல் கட்சி தலைவர் ஒருவரை மேடையில் ஏறி தாக்குவோம் என்று கூறியிருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கொண்டிருப்பதற்கு காரணம் ஆளும் கட்சியும், அமைச்சர்களும் தான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஏற்கனவே, சில அமைச்சர்களும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததை கண்டு கொள்ளாத தமிழக அரசு, காவல்துறை மற்றும் முதல்வர் ஸ்டாலின் பெண் அமைச்சரின் இந்த பேச்சுக்கும் கை கட்டி, வாய் பொத்தி மௌனம் காப்பது முறையல்ல.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கீதா ஜீவன் அவர்களே, கடமை தவறி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தொனியில் பேசியுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். மேலும், பொது வெளியில் பொறுப்புள்ள கட்சி தலைவர் ஒருவரை மிரட்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட வேண்டும்.

இல்லையேல், சவால் விடுகிறேன், அவர் எந்த இடத்தில் அண்ணாமலை அவர்களை மிரட்டினாரோ, நான் அதே இடத்தில் தமிழக பா.ஜ.க பொது நடத்தும் கூட்டத்தில், தமிழக அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள், முறைகேடுகள் குறித்தும், தி.மு.க.வின் அராஜகம் குறித்தும் மக்களிடையே எடுத்து சொல்கிறேன்.

அமைச்சர் கீதா ஜீவன் கூறிய அதே வார்தைகளின் படி, தி.மு.க வினருக்கு சூடு, சொரணை இருந்தால், தைரியம் இருந்தால் மேடையில் ஏறி பார்க்கட்டும். தி.மு.க ஆண்டு கொண்டிருப்பது தமிழக மாநிலத்தை. ஆனால், பா.ஜ.க. ஆள்வது இந்திய நாட்டை என்பதை தி.மு.க வினர் மறந்து விட வேண்டாம்.


Share it if you like it