பிரதமர் மோடியை கொல்ல பி.எஃப்.ஐ. சதி!

பிரதமர் மோடியை கொல்ல பி.எஃப்.ஐ. சதி!

Share it if you like it

பாரத பிரதமர் மோடியைக் கொல்ல பி.எஃப்.ஐ. சதித் திட்டம் தீட்டியதாக அமலாக்கத்துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் மீது பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுதல், முறைகேடான பணப் பரிமாற்றம், பயங்கரவாத பயிற்சி அளித்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில், நாடு முழுவதிலுமுள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் வீடுகள் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்க இயக்குநரகம் ஆகியவை நேற்று முன்தினம் சோதனை நடத்தின.

இச்சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஷபீக் பயேத்தும் ஒருவர். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பயணம் செய்தார். அப்போது, பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சதித் திட்டம் தீட்டி இருக்கிறார்கள். இதற்காக, ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து வைத்திருந்ததாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டி இருக்கிறது.

மேலும், இந்த அமைப்பினரால் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 120 கோடி ரூபாய்க்கான விவரங்களையும் சேகரித்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. அதேபோல, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் 3 அலுவலகப் பொறுப்பாளர்கள் பெர்வேஸ் அகமது, எம்.டி.இலியாஸ், அப்துல் முகீத் ஆகியோர் டெல்லியிலிருந்து அமலாக்கத்துறை இயக்குநகரத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், “பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளில் பல ஆண்டுகளாக ரூ.120 கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதன் பெரும்பகுதி இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து அறியப்படாத மற்றும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களிலிருந்து ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிதி காலப்போக்கில் அவர்களின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதில் வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பிப்ரவரி 2020-ல் டெல்லி கலவரங்களுக்கு வழிவகுத்த பிரச்னைகள், ஹத்ராஸுக்கு பி.எஃப்.ஐ. உறுப்பினர்கள் வருகை ஆகியவை அடங்கும். விசாரணையின்போது, ​​பி.எஃப்.ஐ. உறுப்பினர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன” என்று தெரிவித்தனர்.


Share it if you like it