வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி

வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி

Share it if you like it

வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி

(06.06.1908 – 29.01.1998)

       இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது, அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர், பி.எஸ்.பி. பொன்னுசாமி.

இந்திய விடுதலைப் போராட்டத்தில், பல தியாகங்கள் செய்த பி. எஸ். பி. பொன்னுசாமி, மதுரை மாவட்டம் பேரையூரில், பி. எஸ். பொன்னாயிரம் பிள்ளை – முத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். இவர் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து மறைந்தது, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில். இப்பகுதியில் ‘பி.எஸ்.பி’ என அழைக்கப் பட்டார்.

     இளம் வயதில், அண்ணல் காந்தியடிகளை மதுரையில் சந்தித்ததன் விளைவாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

     ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே ரயில் கவிழ்ப்புச் சதி, தந்திக் கம்பிகள் அறுப்பு, ஒரே நாள் நள்ளிரவில் 10 கள்ளுக் கடைகளுக்கு   தீ வைப்பு போன்றவற்றில், இவரும் இவரது நண்பர்களும் ஈடுபட்டதாக போலீசாருக்குத் தெரிய வந்தது. உடனிருந்த ஒருவரே காட்டிக் கொடுத்தது தான் காரணம். இவர்களிடம் இருந்து 13 கள்ளத் துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் மற்றும் ஒரு டைப் ரைட்டர் ஆகியவை கைப்பற்றப் பட்டன.

     இதையடுத்து, நள்ளிரவு 2 மணி அளவில், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் அப்பன் ராஜ், போலீசாருடன் பொன்னுசாமி பிள்ளை வீட்டுக்குச் சென்று, அவரை அடித்து ஊரின் மையப் பகுதியான முத்தாலம்மன் திடலுக்கு இழுத்து வந்தார். பொது மக்கள் முன்னிலையில் தடியால் தாக்கினர். இதில் பொன்னுசாமி பிள்ளை, நெற்றியில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

விடிந்ததும், அரசு டாக்டர் நயினார் பிள்ளை உதவியால், ஸ்ரீ வில்லிபுத்தூர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். பின்னர், சிவகாசி உதவி கலெக்டர் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு, ஓராண்டு கடுங்காவல் சிறையும், 15 ரூபாய் அபராதமும் இவருக்கு விதிக்கப் பட்டது.

     சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆகியவற்றில் பங்கேற்று, இரு முறை மதுரை சிறையில் அடைக்கப் பட்டார். சிறையில் வ.உ.சி.யைப் போல, இவரும் செக்கு இழுத்து இருக்கிறார். ஒருநாள் சிறைக் கஞ்சியில் புழு இருந்ததைப் பார்த்து, சக கைதிகளைத் திரட்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மாவட்ட ஆட்சியரும், நீதிபதியும் நேரில் வந்து விசாரித்து, இவரது கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால் சிறை அதிகாரிகள், இவர் மீது பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

     “நிலை விலங்கு’ தண்டனை அளித்தனர். சுவற்றில் உள்ள இரும்பு வளையங்களில், இவரது கைகளைப் பிணைத்து நிற்க வைப்பது தான், இத்தண்டனை. காலை 9 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும், இவ்வாறு நின்று கொண்டிருக்க வேண்டும். இத்தண்டனை 8 நாள்கள் நீடித்தது. சிறையில் இருந்த போது, இவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் போடப் பட்டன, பின்னர் இவை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டன.

        இவரது தியாகத்தைப் பாராட்டி, சுதந்திர தின வெள்ளி விழாவின் போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவித்தார். “வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் பொன் விழாவில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார். தியாகிகளுக்கான மத்திய, மாநில அரசு ஓய்வூதியம் இவருக்குக் கிடைத்து வந்தது.

    சுதந்திரம் பெற்ற பின், வத்திராயிருப்பு பகுதியில் அரசியல் பணியுடன் ஹரிஜன சேவை, கதர் மற்றும் கூட்டுறவு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பிளவு படாத ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலராகவும் இருந்துள்ளார். வாழ்வின் பிற்பகுதியில் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, கோயில் திருப்பணிகளில் முக்கிய பங்காற்றினார்.

    தமது 90வது வயதில், 1998ம் ஆண்டு, ஜனவரி 29ம் தேதி, வத்திராயிருப்பில் அவரது இல்லத்தில் காலமானார். காந்தியவாதியான இவரது உடல் தகனம், காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி நடந்தது.

       இவரது தியாகம், எளிமை, நேர்மை, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை இப்பகுதி மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றனர்.   


Share it if you like it