உலகின் குருவாக இந்தியா திகழும்: ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் பேச்சு!

உலகின் குருவாக இந்தியா திகழும்: ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் பேச்சு!

Share it if you like it

உலகின் குருவாக இந்தியா திகழ வேண்டும். உலகை அறம் ஆட்சி செய்ய வேண்டும் எனும் குறிக்கோள்களுடன் ஆர்.எஸ்.எஸ். பணியாற்றி வருவதாக சேலத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில், சேலம் மற்றும் ஆத்தூரில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். மாநிலத் தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். இதையடுத்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; ”ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் கட்டுக்கோப்பான ஊர்வலத்தைப் பார்த்த பொதுமக்கள், இந்து தர்மம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை பாதுகாப்பாக இருப்பதற்கு இவர்கள் தான் காரணம் என்பதை அறிந்துள்ளனர். பாரதத் தாயை அரியணையில் ஏற்ற வேண்டும், உலகை அறம் ஆட்சி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சாதி, மொழி வேறுபாடின்றி ஒற்றுமையாக இருப்பதைப் பார்த்து, அண்ணல் அம்பேத்கார், மகாத்மா காந்தி ஆகியோர், தீண்டாமை இல்லா சமுதாயத்தை ஆர்.எஸ்.எஸ். ஏற்படுத்தி வருகிறது என்று பாராட்டினர். தமிழகத்தில், ராமலிங்க வள்ளலாரின் 200-வது ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், அவரது சன்மார்க்க கொள்கையை பரப்பும் பணியை, ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுள்ளது.

உலகின் குருவாக இந்தியாவை மாற்றும் தேசப்பணியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டுள்ளது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைந்திருக்கக் கூடாதென்று தமிழகத்தில் சில சக்திகள் முயன்று வருகின்றன. ஆனால், தமிழக மக்கள், தேசப்பற்று மிக்கவர்களாக இருக்கின்றனர். வரும் 2024-ம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ளது. அப்போது, தமிழகம் உள்பட நாடு முழுவதும், ஒவ்வொரு மண்டலத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தப்படும்” என்றார்.


Share it if you like it