ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை!

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை!

Share it if you like it

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூனாராம். இவரது மனைவி பன்வாரி தேவி. இவர்களது மருமகள் தாபு மற்றும் பிறந்து 7 மாதங்களேயான பேத்தி ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து 4 பேரையும் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருக்கிறார்கள். பின்னர், வீட்டிற்கும் தீ வைத்தனர். வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, மர்ம நபர்கள் 4 பேரையும் கொலை செய்துவிட்டு, அவர்களது உடலை எரிப்பதற்காக வீட்டிற்கு தீ வைத்தது தெரியவந்தது. இதில், 7 மாத குழந்தையின் உடல் முற்றிலும் எரிந்து விட்டதாகவும், மீதமுள்ள 3 பேரின் உடல்கள் பாதி எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. அதேபோல, யார் கொலை செய்தது என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

தகவலறிந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். இக்கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அங்கு பதற்றம் நிலவி வருவதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.


Share it if you like it