சீனாவிடமிருந்து ராஜீவ் அறக்கட்டளை ரூ.1.35 கோடி நன்கொடை: அமித் ஷா பகீர் தகவல்!

சீனாவிடமிருந்து ராஜீவ் அறக்கட்டளை ரூ.1.35 கோடி நன்கொடை: அமித் ஷா பகீர் தகவல்!

Share it if you like it

சீன தூதரகத்திடம் இருந்து 1.35 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெற்றதால் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த சூழலில், அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவான் செக்டர் பகுதியில், கடந்த 9-ம் தேதி இந்தியா – சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது, சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றிருக்கிறார்கள். ஆனால், இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து விரட்டியடித்தது. இந்த மோதலில் இரு நாட்டு வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதையடுத்து, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது, “இந்திய சீன வீரர்கள் மோதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமலியில் ஈடுபட்டனர். அப்போதுதான், கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விப் பட்டியலை எதேச்சையாகப் பார்த்தேன், அப்பட்டியலில், 5-வது கேள்வியாக ராஜீவ் காந்தி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பானதாக இருந்தது. இதைப் பார்த்த பின்புதான், காங்கிரஸ் கட்சியினர் ஏன் இந்தளவுக்கு பதற்றம் அடைகிறார்கள் என்பது தெரிந்தது.

அதாவது, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி இருந்தபோது, 2005-06 மற்றும் 2006-07-ம் ஆண்டில் சீன தூதரகத்திடம் இருந்து 1.35 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றிருக்கிறது. இது அன்னிய பங்களிப்புச் சட்டத்தின் விதிகளுக்கு முரணானது. ஆகவே, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.பி.க்கள் அனுமதித்தால், நாடாளுமன்றத்தில் இதற்கு விளக்கமும், பதிலும் அளிப்பேன். நேரு பிரதமராக இருக்கும்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தரமான இடம் வழங்கப்பட்டது. ஆனால், சீனா மீது நேருவுக்கு இருந்த அன்பால், அந்த இடம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it