பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் !

Share it if you like it

கோத்தகிரியில் பழங்குடியின மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். விவசாயி. இவர், கடந்த 2021-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெற்றோர் விசாரித்ததில், மாணவியை பாலசுந்தரம் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சோமசுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.அப்துல் காதர் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சோமசுந்தரத்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 லட்சத்து 500 அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மாணவியின் குழந்தை பராமரிப்புக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Share it if you like it